6. வாழ்த்துக் காதை



26.

வள்ளைப் பாட்டு

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்;



26
உரை
26

''தீங்கரும்பு . . . பாடல்''

        தீங்கரும்பு நல் உலக்கையாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் - இனிய கரும்பினை நல்ல உலக்கையாகக் கொண்டு கொழுவிய முத்தினைப் பொலிவுற்ற காஞ்சி மரத்து நிழற்கண்ணே குற்றுவாராய புகார் நகரத்து மங்கையர், ஆழிக் கொடித் திண்டேர்ச் செம்பியன்-வலிய உருளுடைய கொடி கட்டிய திண்ணிய தேரினையுடைய சோழனது, வம்பு அலர் தார்ப் பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல் - மணம் பரந்த மாலை சூடிய வலிய பெரிய மலைபோலுந் தோளினைப் பாடும் பாடலே சிறப்புடைப் பாடலாம், பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் - அம் மகளிர் ஆர்த்தலைச் செய்யும் பாடலே சிறந்த பாடலாம்;

       
வள்ளை - உலக்கைப்பாட்டு. பூங்காஞ்சி - மலர்க்காஞ்சி எனலுமாம். அவைத்தல் - குறுதல். பாழி-வலிமை, பெருமை. ஆழி-ஆக்கினா சக்கரமுமாம். ஆரிக்கும்-ஆதரிக்கு மென்றுமாம். மருதவளம் கூறியவாறு.