6. வாழ்த்துக் காதை



8.

தேவந்தி ஐயையைக் காட்டி யரற்றியது

ஐயந்தீர் காட்சி யடைக்கலங் காத்தோம்ப
வல்லாதேன் பெற்றேன் மயலென் றுயிர்நீத்த
அவ்வை மகளிவடான் அம்மணம் பட்டிலா
வையெயிற் றையையைக் கண்டாயோ தோழீ
மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ;



8
உரை
8

"ஐயந்தீர் காட்சி . . . கண்டாயோ தோழீ"

        ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப வல்லாதேன் - கவுந்தி யடிகள் அளித்த அடைக்கலப் பொருளைப் பேணிக்காத்தற்கு மாட்டாத யான், பெற்றேன் மயல் என்று உயிர்நீத்த - பித்துற்றேன் என்று கூறி உயிர்விட்ட, அவ்வை மகள் இவள்தான் அம் மணம் பட்டிலா வை எயிற்று ஐயையைக் கண்டாயோ தோழீ - மாதரியின் மகளாகிய வதுவை செய்யப் பெறாத இக் கூரிய பற்களையுடைய ஐயையைத் தோழீ பார்த்தனையோ, மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ-மாமியின் மடப்பத்தை யுடைய மகளைத் தோழீ பார்த்தனையோ;

       
ஐயந்தீர் காட்சி - தெளிந்த அறிவு; அதனையுடைய கவுந்தியடி கட்கு ஆகுபெயர். மயல் - பித்து. அவ்வை என்றது ஈண்டுத் தாய் என்னும் பொருள் குறியாது முதியாள் என்பது குறித்து நின்றது. மாதரி இறந்தமையால் மணம் படுத்துவாரின்மையின், மணம்பட்டிலா ஐயை என்றாள். வை - கூர்மை. முன்னர், ஐயையைக் கண்ணகியின் 1 "நாத்தூண்" எனக் கூறினமையான், கண்ணகிக்கு மாதரி மாமி யாயினாள் என்க.



1 சிலப். 16 : 19.