6. வாழ்த்துக் காதை



9.

செங்குட்டுவன் கூற்று

என்னேயிஃ தென்னேயிஃ தென்னேயிஃ தென்னேகொல்
பொன்னஞ் சிலம்பிற் புனைமே கலை வளைக்கை
நல்வயிரப் பொற்றோட்டு நாவலம் பொன்னிழைசேர்
மின்னுக் கொடியொன்று மீவிசும்பிற் றோன்றுமால்;



9
உரை
9

"என்னேயிஃ தென்னே ... தோன்றுமால்"

        என்னே யிஃது என்னே யிஃது என்னே கொல்- ஈதென்ன வியப்பு, பொன்னஞ் சிலம்பிற் புனைமேகலை வளைக் கை - பொன்னாலாகிய அழகிய சிலம்பினையும் புனையப்பட்ட மேகலையினையும் வளைசேர்ந்த கையினையும், நல்வயிரப் பொன் தோட்டு நாவலம் பொன்னிழை சேர் - குற்றமற்ற வயிரம் பதித்த பொற்றோட்டினையும் சாம்பூநதப் பொன்னினாலாகிய ஏனை அணிகளையும் உடைய, மின்னுக்கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால் - ஓர் மின்னற்கொடி உயர்ந்த வானத்திடத்துக் காணப்படுகின்றது;

       
அடுக்கு வியப்பு மிகுதியை உணர்த்திற்று. நாவலம் பொன் - சாம்பூநதமென்னும் பொன். மின்னுக்கொடி என்றது கண்ணகியை.