7. வரந்தரு காதை





100



ஒளித்த பிறப்புவந் துற்றதை யாதலின்
புகழ்ந்த காதலன் போற்றா வொழுக்கின்
இகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய்

ஏதில் நன்னாட் டியாருமில் ஒருதனிக்
காதலன் றன்னொடு கடுந்துய ருழந்தாய்
யான்பெறு மகளே என்றுணைத் தோழீ
வான்றுயர் நீக்கும் மாதே வாராய்



97
உரை
103

       ஒளித்த பிறப்பு வந்து உற்றதை ஆதலின் - முந்தைப் பிறவியின் உணர்ச்சி வந்து தோன்றியதாகலான், புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் இகழ்ந்து அதற்கு இரங்கும் என்னையும் நோக்காய் - பிரிவுக் காலத்தும் நீ புகழ்ந்துரைத்த நின் கணவனது பெரியோர் வெறுக்கும் ஒழுக்கத்தினை எள்ளி அவ்வொழுக்கங் காரணமாக வருந்தும் என்னையும் கருதாயாய், ஏதில் நல்நாட்டு யாரும் இல் ஒரு தனிக் காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய் - வேற்று நாட்டிடை எவருந் துணையில்லாத ஒப்பற்ற தனிமையால் கணவனோடே மிக்க துன்பமுற்றனை, யான்பெறு மகளே - யான் வருந்தியீன்ற மகளே, என் துணைத் தோழீ - எனக்குத் துனையாகவிருந்தமையால் தோழி அனையாய், வான்துயர் நீக்கு மாதே வாராய்-எமது மிக்க துயரத்தைப் போக்கிய நங்காய் வாராயோ ;

உற்றதை, வினைத் திரிசொல், ஒழுக்கின், இரண்டனுருபு தொக்கது. போற்றா வொழுக்கினால் நின்னை இகழ்ந்ததற்கு என்றுரைத்தலுமாம். ஒரு தனி - தன்னந் தனியே. இது கண்ணகி தாயின் கூற்று.