முடியுடை
வேந்தர் மூவருள்ளும் - முடியுடைய மன்னராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும்,
குடதிசை ஆளும் கொற்றம் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத்து உதித்தோர் - மேற்றிசைக்கண்ணதாகிய
மலைநாட்டினை யாளும் குன்றாத வென்றியையும் ஆரமணிந்த மார்பினையுமுடைய சேரர் குலத்துப்
பிறந்தோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும் ஆண்மையும் திறலும், அவர்தம் பழவிறல்
மூதூர்ப் பண்புமேம்படுதலும் - அவரது பழைய பெருமையையுடைய தொன்னகராகிய வஞ்சியின் இயல்பு
மேம்பட்டு விளங்குதலும், விழவுமலி சிறப்பும் - அந்நகரின்கண் விழாக்கள் நிறைந்த
சிறப்பும், விண்ணவர் வரவும் - வானோர் வருகையும், ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவரது நாட்டில் உறையும்
குடிமகளின் செல்வமும் உணவின் பெருக்கமும், வரியும் குரவையும் விரவிய கொள்கையின்
- தம்மிற் கலந்த தன்மையையுடைய வரியும் குரவையுமாகிய பாட்டும் கூத்தும், புறத்துறை
மருங்கின் - புறத்திணைக்குரிய துறைகளிலே, அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த -
அறத்துடன் கூடிய போர்த்துறைகளைச் செய்து முடித்த, வாய்வாள் தானையொடு பொங்கு இரும்
பரப்பின் கடல்பிறக்கு ஓட்டி - தப்பாத வாளினையுடைய சேனையுடன் சென்று மிக்க பெரிய
பரப்பினையுடைய கடலின் கண் வாழும் பகைஞரைப் பிறக்கிடுமாறு துரந்து, கங்கைப் பேர்
யாற்றுக் கரை போகிய - கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண் மேற்சென்ற, செங்குட்டுவனோடு
- செங்குட்டுவன் என்னும் சீர்த்தி மிக்க வேந்தனோடு, ஒரு பரிசு நோக்கிக் கிடந்த
வஞ்சிக்காண்டம் முற்றிற்று - ஒருவாறு நோக்கும்படி அமைந்த வஞ்சிக் காண்டமென்னும்
இத் தொடர்நிலைச் செய்யுளின் முன்றாம் பகுதி முற்றிற்று என்க.
சேரர் குலத்தோரின் அறன் முதலாக
ஈண்டுத் தொகுத்துரைத்தவற்றை இக்காண்டத்தில் ஆண்டாண்டுக் கண்டுணர்க. மறத்துறை முடித்த
குட்டுவன், தானையொடு கடல்பிறக் கோட்டிக் கரைபோகிய குட்டுவன் எனத் தனித்தனி முடிக்க.
கடல்பிறக் கோட்டியதும் கரைபோகியதும் 1முன்னர்ப்
போந்தமை காண்க. அறன்முதலாகக் குரவையீறாகக் கூறியன் பலவும் செங்குட்டுவனோடு ஒரு
பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்ட மென்க.
|