2. மனையறம்படுத்த காதை





35
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்

தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத்
தீராக் காதலின் திருமுக நோக்கிக்
கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை


32
உரை
37

       வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு - வண்டுகள் புரியை நெகிழ்க்க நெடிய நிலவைப்போல விரிந்த வெள்ளிய இதழையுடைய மல்லிகையின் மலர்ச்சியையுடைய மாலையோடே, கழுநீர்ப்பிணையல் முழுநெறி பிறழ - இதழொடியாது கட்டின கழுநீர்ப்பிணையலும் குலைந்து அலைய, தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - மார்பிலிட்ட இவ்விரு வகை மாலையும் மயங்கப்பட்டு இருவரும் செயலற்ற புணர்ச்சி யிறுதிக்கண், தீராக் காதல் திருமுகம் நோக்கி-நீங்காத காதலையுடைய திருமகளைப் போல்வாளுடைய முகத்தை நோக்கி, கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை - முன்னர்க் கருதாத பொருள் பொதிந்த உரையைக் கோவலன் கூறாநிற்பன் :

       நிலா - ஒளியுமாம். தாரும் மாலையும் மயங்கி என்பதனாற் புணர்ச்சி கூறிற்று ; இடக்கரடக்கு. கையறுதல் - கலவியால் அவசமுறுதல். காதலால் என விரித்தலுமாம். திரு - திருப்போல் வாள். ஓர், அசை. குறியா - தன் அறிவு முதலியவற்றைக் கருதாத என்றுமாம். கட்டுரை - நலம் பாராட்டல் என்னும் பொருள் பொதிந்த உரை.