3. அரங்கேற்று காதை

95




100




105




110



எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்
கோலள விருபத்து நால்விர லாக
எழுகோ லகலத் தெண்கோல் நீளத்
தொருகோல் உயரத் துறுப்பின் தாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப்
பூதரை யெழுதி மேனிலை வைத்துத்
தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங்
கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்

95
உரை
113

அரங்கின் அமைதி]


       
(எண்ணிய......அரங்கத்து) எண்ணிய நூலோர் இயல்பினின் வழாது மண்ணகம் ஒருவழி வகுத்தனர்கொண்டு - எண்ணப்பட்ட சிற்ப நூலாசிரியர் வகுத்த இயல்புகளின் வழுவாத வகை அரங்கியற்றுதற்குக் குற்றம் நீங்கின ஓரிடத் திலே நிலம் வகுத்துக்கொண்டு, புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழை கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு - பொதியின் முதலாய திப்பிய மலைப்பக்கங்களிலே நீண்டு வளர்ந்த மூங்கிலிற் கண்ணொடு கண்ணிடை ஒரு சாணாக வளர்ந்தது கொண்டு, நூல்நெறி மரபின்
- நூல்களிற் கூறப்படும் முறையாலே, அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல்ஆக - அரங்கம் இயற்றுதற்கு அளக்குங்கோல் உத்தமன் கைப் பெருவிரல் இருபத்து நான்கு கொண்ட அளவினதாக நறுக்கி, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி - அக்கோலால் எழுகோல் அகலமும் எண் கோல் நீளமும் ஒருகோற் குறட்டுயரமும் உடையதாய், உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற் கோல் ஆக - தூணின்மீது வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கின் தளத்திற்கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் நான்கு கோலளவினதாகவும், ஏற்ற வாயில் இரண்டு உடன்பொலிய - அவ்வளவுகட்குப் பொருந்த வகுக்கப்பட்ட வாயில் இரண்டு விளங்கவும், தோற்றிய அரங்கில் - செய்யப்பட்ட அரங்கிலே, தொழுதனர் ஏத்தப் பூதரை எழுதி மேல்நிலை வைத்து - நால் வகை வருணப் பூதரையும் எழுதி யாவரும் புகழ்ந்து வணங்க மேனிலத்தே வைத்து, தூண்நிழற் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு - தூண்களின் நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி மாட்சிமைப்பட்ட நிலைவிளக்கு நிறுத்தி, ஒருமுக எழினியும் பொருமுக எழினியும் கரந்துவரல் எழினியும் புரிந்து உடன்வகுத்து ஆங்கு - இடத்தூண் நிலை யிடத்தே உருவு திரையாக ஒருமுக வெழினியும் இரண்டுவலத் தூணிடத்தும் உருவு திரைவாகப் பொருமுக வெழினியும் மேற் கட்டுத் திரையாகக் கரந்துவர லெழினியும் தொழிற்பாட்டுடனே வகுத்து, ஓவிய விதானத்து - சித்திர விதானத்தையும் அமைத்து, உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளைவுடன் நாற்றி - புகழமைந்த முத்துமாலைகளாற் சரியும் தூக்கும் தாம முமாகத் தொங்கவிட்டு, விருந்துபடக் கிடந்த அருந்தொழில்

       
அரங்கத்து - புதுமை யுடைத்தாகப் பொருந்திய அரியதொழிலை யுடைய அரங்கின்கண்;