3. அரங்கேற்று காதை


115




120





125
பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த
சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய
நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்த னாகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
மண்ணிய பின்னர் மாலை யணிந்து
நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை
அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு
முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவுந்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு

114
உரை
128

[தலைக்கோல் அமைதி]


       (பேரிசை மன்னர் ... வைத்தாங்கு) பேர்இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த - பெரிய புகழையுடைய பகையரசர் போர்செய்து புறங்கொடுத்தவழிப் பறிக்கப்பட்ட, சீர் இயல் வெண் குடைக் காம்பு நனி கொண்டு - அழகு பொருந்திய வெண்கொற்றக் குடையின் காம்பை நன்கு எடுத்து கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய - கணுக்கள் தோறும் கழுவிய நவ மணிகளாற் கட்டி, நாவல்அம் பொலம் தகட்டு இடைநிலம் போக்கி - சாம்பூநதம் என்னும் பொன்னின் தகட்டாலே கணுக் கட்கு நடுவாகிய இடங்களைக் கட்டி, காவல் வெண்குடை மன்னவன் கோயில் - உலகினைப் புரக்கும் வெண்குடையையுடைய அரசன் கோயிலில், இந்திர சிறுவன் சயந்தன் ஆகென - தேவேந்திரன் மகன் சயந்தனாக நினைத்து, வந்தனை செய்து வழி படு தலைக்கோல் - மந்திர விதியாலே பூசித்து வழிபட்டுக் காப்பமைத்து இருத்திய தலைக்கோலை, புண்ணிய நன்னீர் பொற் குடத்து ஏந்தி மண்ணிய பின்னர் மாலை அணிந்து - முன்கூறிப் போந்த ஆடலாசிரியன் முதலாயினோர் புண்ணிய நதிகளின் நல்ல நீரைப் பொற் குடத்திலே முகந்து வந்து நீராட்டிய பின்பு மாலைகளுஞ் சூட்டி, நலம் தரு நாளால் - இதற்குப் பொருந்திய நல்ல நாளிலே, பொலம் பூண் ஓடை அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு - பொன்னாலாகிய பூணினையும் பட்டத்தினையு முடைய பட்ட வருத்தனத்தின் பெரிய கையில் வாழ்த்துடன் கொடுத்து அதனை உடன்கொண்டு, முரசு எழுந்து இயம்ப - மும்முரசும் எழுந்து முழங்கவும், பல் இயம் ஆர்ப்ப - அவை யன்றிப் பல வாச்சியங்களும் ஒலிக்கவும், அரசொடு பட்ட ஐம் பெருங் குழுவும் - அரசனும் அமைச்சர் புரோகிதர் சேனாபதியர் தூதுவர் சாரணர் என்னும் ஐம்பெருங் குழுவினரும் உடன்வர, தேர் வலம் செய்து கவி கைக்கொடுப்ப - வீதியின் கண் நின்ற தேருடன் வலஞ்செய்து தேர்மிசை நின்ற பாடுவோன் கையிலே இத் தலைக்கோலைக் கொடுத்து, ஊர்வலஞ் செய்து புகுந்து முன் வைத்தாங்கு - நகரியை வலமாகவந்து அரங்கின் கட்புகுந்து தலைக்கோலை எதிர்முகமாக வைத்தபின் ;