3. அரங்கேற்று காதை


130




135




140




145




150




155




இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீரியல் பொலிய நீரல நீங்க
வாரம் இரண்டும் வரிசையிற் பாடப்
பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங்
கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
ஆமந் திரிகையோ டந்தர மின்றிக்
கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து
மூன்றளந் தொன்று கொட்டி அதனை
ஐதுமண் டிலத்தாற் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப்
பின்னையும் அம்முறை பேரிய பின்றைப்
பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன்

129
உரை
159

       (இயல்பினின்......காட்டின ளாதலின்) இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் - அரசன் முதலிய யாவரும் தகுதிக் கேற்ற இருக்கைகளில் முறையே இருந்தபின், குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப - இடக்கை முதலிய குயிலுவக் கருவியாளர் தாம் நிற்க வேண்டிய முறைப்படி நிற்க, வலக்கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து - அரங்கேறும் நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கிலே வலக்காலை முன்வைத்து ஏறி, வலத் தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி - பொருமுக வெழினிக்கு நிலையிடனான வலப்பக்கத் தூணைச் சேர்தல் முறை யென்று அவ்விடத்தைச் சேர்ந்து, இந்நெறி வகையால் இடத் தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் - மாதவி வந்தேறி நின்றவாறே ஒருமுக வெழினிக்கு நிலையிடனான இடப்பக்கத் தூணினைச் சேர்ந்து நின்ற பழைய நெறியியற் கையை யுடைய தோரிய மடந்தையரும் தானும், சீர்இயல் பொலிய நீர் அல நீங்க - நன்மை மிகவும் தீமை நீங்கவும் வேண்டி, வாரம் இரண்டும் வரிசையிற் பாட-ஓரொற்று வாரம் ஈரொற்று வாரம் என்னும் தெய்வப் பாடல் இரண்டினையும் முறையாலே பாட, பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும்

       கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் - பாடிய தெய்வப் பாடலின் இறுதியிலே நின்று கூடி இசையா நிற்கும் கருவிகளெல்லாம், குழல் வழி நின்றது யாழே - வங்கியத்தின் வழி யாழ்ப் பாடல் நின்றதாக, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே - யாழ்ப் பாடலின் வழியே மத்தளம் தகவுற நின்றதாக, தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே - மத்தளத்தின் வழியே குடமுழா நின்றதாக, முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந்திரிகை - முழவுடன் கூடிநின்று வாச்சியக் கூறுகளை அமைத்தது இடக்கையின் ஓசையாக, ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி - இடக்கையோடு முன் சொன்ன குயிலுவக் கருவிகள் அனைத்தும் பருந்தும் நிழலும்போல ஒன்றாய் நிற்ப, கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக - ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக, கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகப் கட்டப்பட்ட தேசி யொத்தை ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாகப் பத்தும் தீர்வு ஒன்றுமாகப் பதினொரு பற்றாலே தேசிக் கூத்தை ஆடிமுடித்து, வந்த முறையின் வழிமுறை வழாமல் - இப்படிச் செய்கை நாடக நூல்களில் அமைந்த முறையாகலான் அம்முறை வழுவாமல், அந்தரக் கொட்டு உடன் அடங்கிய பின்னர் - அந்தரக்கொட்டு என்றும் முகம் என்றும் கூறப்படும் இவ்வொத்து ஆடிமுடிந்த பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் பகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல் - மங்கலப் பண்ணாய் நரப்படையவும் உடைத்தா யிருக்கின்ற பாலைப்பண்ணை அளவு கோடாதபடி ஆளத்தியிலே வைத்து அதன்மேலே, நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து - மங்கலச் சொல்லினை யுடைத்தாய் நாலுறுப்பும் குறைபாடில்லாத உருவுக்குச் சொற்படுத்தியும்
இசைப்படுத்தியும் அறிந்து பாட்டும் கொட்டும் கூத்தும் நிகழ்த்தி, மூன்று அளந்து ஒன்று கொட்டி அதனை - மூன்றொத்துடைய மட்டத்திலே எடுத்து ஓரொத்துடைய ஏக தாளத்திலே முடித்து, ஐது மண்டிலத்தால் - அழகிய மண்டில நிலையாலே, கூடை போக்கி - தேசிக்கு ஒற்றித் தொத்தலும் இரட்டித் தொத்தலுமே யாகலின் தேசிக் கூறெல்லாம் ஆடி முடித்து.

                            (இனி மார்க்கங் கூறுகின்றது.)

       ஆறும் நாலும் அம்முறை போக்கி - பஞ்சதாளப் பிரபந்தமாகக் கட்டப்பட்ட வடுகிலொத்தையும் தேசியிலொத்தைக் காட்டினாற் போல இரட்டிக் கிரட்டியாக ஆடி, கூறிய ஐந்தின் கொள்கை போலப் பின்னையும் அம்முறை பேரிய பின்றை - முன் சொல்லிப் போந்த தேசியைப்போல வடுகும் மட்டத்தாளம் முதலாக ஏகதாளம் அந்தமாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னர், பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்தென - பொன்னால் இயன்றதோர் பூங்கொடியானது கூத்து நடித்தாற்போல, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலின் - தாண்டவம் நிருத்தம் ]

       நாட்டியம் என்னும் மூன்று கூறுபாட்டினும் நாட்டியமென்னும் புற நடத்தை நூல்களிற் சொன்ன முறைமை தவறாமல் அவிநயித்துப் பாவகந் தோன்ற விலக்குறுப்புப் பதினான்கின் நெறிவழுவாமல் ஆடிக்காட்டினள் ஆதலால்;

       'இக்காதையிற் கூறிய முத்தமிழ் வகையும் காட்டினளாதலின் என்றுமாம்' என்பர் தொல்லை யுரை யாசிரியர் இருவரும்.