4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை




75

அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை
ஆம்பல் நாறுந் தேம்பொதி நறுவிரைத்
தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கூந்தல்
பாண்வாய் வண்டு நோதிறம் பாடக்
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப்



72
உரை
76

(அன்ன மென்னடை ......... கணமலர் விழிப்ப)

       அன்னம்; மெல்நடை - அன்னமாகிய மென்மையுடைய நடை யினையும,் ஆம்பல் நாறும் -ஆம்பலின் மணம் நாறும், தேம் பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய் - தேன்மிக்க நறு மணத்தையுடைய தாமரையாகிய சிவந்த வாயினையும், தண் அறற் கூந்தல் - தண்ணிய அறலாகிய கூந்தலினையும் உடைய, நன்னீர்ப் பொய்கை - நல்ல நீரையுடைய பொய்கையாகிய மடவாள், பாண் வாய் வண்டு நேர்திறம் பாட - பாண்டன்மை யைத் தம்மிடத்தேயுடைய வண்டுகளாகிய பள்ளியுணர்த்துவார் புறநீர்மை யென்னும் பண்ணாற் பள்ளியெழுச்சி பாட, காண் வரு குவளைக் கண்மலர் விழிப்ப - அழகுபொருந்திய குவளை யாகிய கண்மலர் விழிப்ப,

       ஆம்பல் நாறும் செவ்வாய் என இயையும். நடையினையும் வாயினையும் கூந்தலினையுமுடைய பொய்கையாகிய பெண் கண் விழிப்ப வென்க. பாண் -பாண் சாதி, நேர்திறம் - புறநீர்மை எனவும் பெயர்பெறும். அது, பாலைப்பண்ணின் திறம் ஐந்தனுள் ஒன்றென்க ; என்னை?

       ''தக்கராக நேர்திறங் காந்தார பஞ்சமமே
       துக்கங் கழிசோம ராகமே -- மிக்கதிறற்
       காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார்
       பூந்தா ரகத்தியனார் போந்து''


       என்பவாகலின். நேர்திறம் என்னின், அது முல்லைப்பண்ணின் திறங் களி லொன்றாம், பாட, காரணப்பொருட்டு ; உடனிகழ்ச்சியுமாம். இனி, ஆம்பல் என்னும் பண் தோற்றும் வாய் என்றும், பாட்டினை யுடைய வாயையுடைய வண்டு என்றும் கூறுதலுமாம். தேம் - இனிமை, தேன். குவளைக் கண்மலர் - குவளையாகிய கள்ளையுடைய மலர், குவளையாகிய கண்மலர். விழிப்ப - மலர, கண்விழிக்க, இஃது உருவக வணி.