5. இந்திரவிழவூரெடுத்த காதை





115
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக்
கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய வாகிக்
கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக்
கொட்பி னல்லது கொடுத்த லீயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்

111
உரை
117

        வம்பமாக்கள் - புதியோர், தம்பெயர் பொறித்த - தம் பெயரெழுதிய, கண்ணெழுத்துப் படுத்த - அடையாள வெழுத் தினை இலச்சினையாக அமைத்த, எண்ணுப் பல பொதி - பலவாகிய
எண்களையுடைய பொதிகள், கடைமுகவாயிலும் - பண்டசாலை வாயிலையும், கருந்தாழ்க் காவலும் - வலிய தாழையுடைய அரணாகிய காவலையும், உடையோர் காவலும் - உடையோர் காத்திருக்குங் காவலையும், ஒரீஇயவாகி - நீங்கினவாகலான், கட்போர் உளர் எனின் - அவற்றைக் களவு செய்வோர் உளராயின், கடுப்பத் தலை யேற்றி - அவர் கழுத்துக் கடுக்கப் பொதியைத் தலையில் வைத்து, கொட்பின் அல்லது - ஊரைச் சூழ்விப்பினல்லது, கொடுத்தலீயாது - அவர்க்கே அவற்றைக்
கொடுத்துவிடாதாதலால், உள்ளுநர்ப் பனிக்கும் - களவென் பதனை மனத்தால் நினைப்பினும் நினைப்போரை நடுங்குவிக்கும், வெள்இடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் ;

        வம்ப மாக்களாகிய உடையோர் என்க. வம்ப மாக்களாகிய கட்போர் என்றுமாம். கண்ணெழுத்து- குறியீட்டெழுத்து, கடை முகவாயில் - ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்கள் வந்து குவிந்திருக்கும் பண்டசாலை வாயில், பண்டசாலையின் புறத்தே கொண்டு போகப்பட்டு, வேறு அரணும் காவலும் இல்லாதிருக்கவும் என்க. உள ரெனின் என்றது பெரும்பாலும் இலரென்பதனை விளக்கிற்று. கொட்பின், பனிக்கும் என்பன பிறவினையாக நின்றன. கட்போர் தமது தலையிற் சுமந்து சுழன்று திரியினல்லது என்றுரைத்தலுமாம்.