5. இந்திரவிழவூரெடுத்த காதை

141 வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசங்
கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி
வால்வெண் களிற்றரசு வயங்கிய கோட்டத்துக்
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித

141
உரை
144

        வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் - வச்சிரக் கோட்டத்திலிருக்கும் மங்கல முரசை, கச்சை யானைப் பிடர்த் தலை ஏற்றி - கச்சையை அணிந்த யானையின் பிடரிடத்தே ஏற்றி, வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து - மிக்க வெண்மை யுடைய அயிராவதம் நிற்கும் கோயிலில் சென்று, கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி - விழாவின் தொடக்கமும் முடிவும் சாற்றி ;

        பண்டு தேவர்களின் படைக்கலம், ஊர்தி முதலியவற்றுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன வென்க. மணங்கெழு முரசு - விழா முரசு. கச்சை - கீழ் வயிற்றிற் கச்சை. தலை - இடம். வால் - இளமையுமாம். களிற்றரசு - அயிராவதம். கால்கோள் - தொடக்கம் . விழவின் கால்கோளும் கடை நிலையும் என்க. களிற்றரசிற்குச் சாற்றினர் அஃது இந்திரனைக் கொணர்தற்கு.

           1"வச்சிரக் கோட்டத்து மணமுழா வாங்கிக்
           கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி"

என்றார் மணிமேகலையுள்ளும்.


1 மணி. 1 ; 27--8.