5. இந்திரவிழவூரெடுத்த காதை





165
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில்
உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென
மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும்
ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட
தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி
மண்ணக மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப

161
உரை
168

        அரைசு மேம்படீஇய - தம் அரசனை மேம்படுத்தற்கு, அகனிலை மருங்கில் - அப் பதியின்கண்ணே, உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென - புகழமைந்த வேந்தன் கொற்றம்
கொள்வானாக என வாழ்த்தி, மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும் - மிகப் பெரிய புவியின்கண்ணே மிக்க உயிர்களைப் புரக்கும், ஆயிரத்து ஓர் எட்டு அரசுதலைக்கொண்ட - ஆயிரத் தெட்டு அரசு தலையிற்கொண்ட, தண்நறுங் காவிரி - குளிர்ந்த நறிய காவிரியின், தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நல்நீர் - பூந்தாது நிறைந்த பெரிய சங்கமத் துறையில் நன்றாகிய தீர்த்த நீரை, பொற்குடத்து ஏந்தி - பொற்குடத்தால் ஏந்தி, மண்ண கம் மருள - மண்ணிலுள்ளோர் மருட்சியுறவும், வானகம் வியப்ப - விண்ணிலுள்ளோர் வியக்கவும், விண்ணவர் தலைவனை - வானோர்க் கரசனாய இந்திரனை, விழுநீர் ஆட்டி-மஞ்சனமாட்ட; அகனிலை - ஊர். ஆயிரத்தெட்டுக் கலசநீர் கொண்டு மஞ்சன மாட்டுதல் மரபு. பொற்குடத்து நீரை ஏந்தி யென்றுமாம். ஆட்டி- ஆட்டவெனத் திரிக்க. அரச குமரரும் பரத குமரரும் மஞ்சன மாட்ட வென்க.

        [அடி: மண்ணக மருள - மண்ணகம் விண்ணகமாய் மாறாட. அன்றி மண்ணிலுள்ளோர் இப்படியே அவ் விண்ணகமிருப்பதென ஒப்புக் காணவென்க வானகம் வியப்ப - வானகத் துள்ளோர் தம் தூறக்கத்தினும் ஈது சிறப்புடைத் தென்று வியக்க. விண்ணவர் தலைவன் - ஈண்டு அவன் வச்சிரம்.]