6. கடலாடு காதை


வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்


62
உரை
63

       வயல் உழை நின்று வடக்கு வாயிலுள் - வாணபுரமாகிய சோநகரின் வடக்கு வாயிற்கண் உளதாகிய வயலிடத்தே நின்று, அயிராணி மடந்தை ஆடிய கடையமும் - இந்திராணி யென்னும் மடந்தை கடைசியர் வடிவுகொண்டு ஆடிய கடையக் கூத்தும் என்னும் இவற்றை.

       வடக்கு வாயில் என்றமையால் வாணபுரம் வருவிக்கப்பட்டது. வயலுழை நின்று என்றமையால் கடையம் கடைசியர் வடிவு கொண்டு ஆடியது என்க. கடைசியர் - உழத்தியர்; 1 "வயன் மாதர்" என்றார் சேக்கிழாரும். இக் கூத்துக்கள் முறையே இன்னின்னாரால் நிகழ்த்தப்பெற்றன வென்பதும், இவற்றிற்குரிய உறுப்புக்கள் இத் துணைய வென்பதும் பின்வருஞ் சூத்திரங்களால் அறியப்படும் :

"கொட்டி கொடுவிடையோ னாடிற் றதற்குறுப்
பொட்டிய நான்கா மெனல்."

"பாண்டரங்க முக்கணா னாடிற் றதற்குறுப்
பாய்ந்தன வாறா மெனல்."

"அல்லிய மாயவ னாடிற் றதற்குறுப்புச்
சொல்லுப வாறா மெனல்."

"நெடியவ னாடிற்று மல்லாடன் மல்லிற்
கொடியா வுறுப்போரைந் தாம்."

"துடியாடல் வேன்முருக னாட லதனுக்
கொடியா வுறுப்போரைந் தாம்."

"அறுமுகத்தோ னாடல் குடைமற் றதற்குப்
பெறுமுறுப்பு நான்கா மெனல்."

"குடத்தாடல் குன்றெடுத்தோ னாட லதனுக்
கடைக்குப வைந்துறுப் பாய்ந்து."

"காமன தாடல்பே டாட லதற்குறுப்பு
வாய்மையி னாராயி னான்கு."

"மாயவ ளாடன் மரக்கா லதற்குறுப்பு
நாமவகை யிற்சொலுங்கா னான்கு."

"பாவை திருமக ளாடிற் றதற்குறுப்
போவாம லொன்றுடனே யொன்று."

"கடைய மயிராணி யாடிற் றதனுக்
கடைய வுறுப்புக்க ளாறு."

(1)


(2)


(3)


(4)


(5)


(6)


(7)


(8)


(9)


(10)


(11)

       பதினோராடலுள் இறைவனாடிய இரண்டினை முன் வைத்தும், மாயோனாடிய இரண்டினையும், முருகன் ஆடிய இரண்டினையும் முறையே அவற்றின்பின் வைத்தும், வென்றி பற்றி நிகழ்ந்த இக் கூத்துக்களின்பின், காமத்தாற் சிறைப்பட்ட அநிருத்தனை மீட்டல் காரணமாக மாயோனாடிய விநோதக் கூத்தினையும், அதன்பின் அவன் மகனாகிய காமன் ஆண்மை திரிந்து பேடியுருக்கொண்டாடிய கூத்தினையும், பின்னர்ப், பெண் தெய்வங்களுள்ளே முறையே மாயவளும் திருமகளும் அயிராணியும் ஆடியவற்றையும் வைத்தும் அவரவர் தகுதிக்கும், ஆண்மை பெண்மைகட்கும், கூத்துக்களின் இயல்புகட்கும் பொருந்த முறைப்படுத்தியுள்ள இளங்கோவடிகளின் திப்பியப் புலமை மாண்பு செப்புதற்கரிய தொன்றாம்.


1. பெரிய பு. நாட்டு. 16.