6. கடலாடு காதை



உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியன் மாக்களொடு
மடலவிழ் கானற் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டின ளாகிப்



111
உரை
114

       உரு கெழு மூதூர் உவவுத் தலைவந்தெனப் பெருநீர் போகும் இரியல் மாக்களொடு - உவாநாள் தலைவந்ததாக உட்குப் பொருந்திய மூதூரினின்றும் கடலாடுதற்கு விரைந்து செல்லும் மாக்களோடு, மடல் அவிழ் கானற் கடல் விளையாட்டு - தாழை புன்னை முதலியவற்றின் இதழ்கள் விரியும் சோலையையுடைய கடல்விளையாட்டை, காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி - தானும் காண்டலை விருப்பத்தோடே வேண்டினளாகி ;

       தலைவருதல், ஒருசொல். தலைவந்தென மூதூரினின்றும் போகும் மாக்கள் என மாறுக. உரு - உட்கு ; அச்சம். பகைவர்க்கு அச்சத்தை விளைக்குமென்க. உவா - நிறைமதிநாள். இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறங்கி விழாவாற்றுப்படுத்த பின்னாளிலே உவா வந்ததாகலின் கடலின்கண் நீராடச் செல்வாராயினர். கடற்கரைக்கண் இடம்பிடிக்க விரைந்து செல்கின்றாராகலின். 'இரியன் மாக்கள்' என்றார் ; இரியல் - விரைவு. காண்டல் - நீர்ப் போரில் வெற்றி தோல்வி காண்டல். வேண்டினள் - காண்டற்குத் தானும் போகக் கோவலனை வேண்டிக்கொண்டாள்; எனவே அவனும் உடன்பட்டமை பெற்றாம்.