6. கடலாடு காதை

115




120

பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணங் காட்ட
வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடியத்
தாரணி மார்பனொடு பேரணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மானமர் நோக்கியும் வைய மேறிக்



115
உரை
120

       பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப - பொய் கைகளில் தாமரைப் பூஞ்சேக்கையில் துயின்ற புட்கள் வாய் விட்டுப் புலம்ப, வைகறை யாமம் வாரணம் காட்ட - வைகறைப் பொழுதென்பதனை வாரணங்கள் அறிவிக்க, வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய - வெள்ளியெழுந்த விளக்கம் செறிந்த இருளை நீக்க, தார் அணி மார்பனொடு - மாலையணிந்த மார்பினையுடைய கோவலனோடு, பேர் அணி அணிந்து - மதாணி முதலிய பேரணி கலங்களை அணிந்து, வான வண் கையன் அத்திரி ஏற - மேகம் போலும் வண்மையையுடைய கையினனாகிய அவன் அரச வாகனமாகிய அத்திரியில் ஏற, மான் அமர் நோக்கியும் வையம் ஏறி - மானின் பார்வை பொருந்திய நோக்கினையுடைய மாதவியும் கொல்லாப் பண்டியில் ஏறி ;

       வைகறையாகிய யாமம் என்க. வாரணம் - கோழி, சங்கு; கோழியின் குரலும் சங்கின் முழக்கமும் வைகறையில் எழுவன. அத்திரி- கோவேறு கழுதை; இதனைக் குதிரையில் ஒரு சாதியென் பாருமுளர். வையம் - கொல்லாப் பண்டி ; இது கோவாலவண்டி என்ற உருவுடனும் காணப்படுகின்றது. வையம் - தேர் என்றும், கூடாரப்பண்டி யென்றும் கூறலுமாம். அவனும் உடன் செல்ல உடம்பட்ட வளவிலே பேரணியணிந்து, வண் கையன் அத்திரி யேற, நோக்கியும் மார்பனொடு செல்ல வையமேறியென்க.