7. கானல்வரி


[ 11 ]

கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கண்ஏர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே



86
உரை
89

         கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர் - கண்ணெனக் கயலையும் புருவமென வில்லையும் கூந்தலெனக் கரிய மேகத்தையும் எழுதி அவற்றுடன் பிறரை வருத்துந் தொழிலையும் எழுதிப் பணிக்குறை யற்ற முகம் திங்களோ காணீர், திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே அங்கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே-அழகிய இடத்தையுடைய வானத்திருப்பின் அரவு கவருமென்று அஞ்சித் திமிலால் வாழ்பவருடைய சீறூரின்கண் வந்து உறையும் அழகிய திங்களோ காணீர் ;

         காமன் செயல் - பிறரை வருத்துந் தொழில். தீர்ந்த - குறையற்ற ; முற்றுப் பெற்ற. திங்களோ, ஓ - வியப்பு, திமில் - மீன் படகு. சீறூர்க்கு, வேற்றுமை மயக்கம். அரவு - இராகு கேது. திங்களோ என வியந்தவன், அது நிலத்தின்கண் வருதற்குக் காரணங் கற்பித்து வானத்தரவஞ்சிச் சீறூரில் வாழ்வதாகிய திங்களோ என்றானென்க.