7. கானல்வரி



90

[ 12 ]

எறிவளைக ளார்ப்ப இருமருங்கு மோடுங்
கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றங் காணீர
கடுங்கூற்றங் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடங்கெழு மென்சாயல் மகளா யதுவே.




90
உரை
93

         எறி வளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஒடும் - கரையிலே அலைகள் எறியும் வளைகள் முழங்க அதற்கஞ்சி இரண்டு பக்கத்தும் ஒடும், கறை கெழு வேற் கண்ணோ கடுங்கூற்றம் காணீர் - குருதிக் கறை பொருந்திய வேல்போன்ற கண்ணையுடையாள் கடிய கூற்றமோ பாரீர், கடுங்கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே மடம் கெழு மென் சாயல் மகளாயது - கடல் வளத்தால் வாழ்பவருடைய சிறிய ஊரிலே மடப்பம் பொருந்திய மிக்க மென்மையையுடைய மகளாகியதான கடிய கூற்றமோ பாரீர் ;

         வேற் கண்-வேற் கண்ணையுடையாள்; ஆகுபெயரென்பர் அரும் பதவுரையாசிரியர். கூற்றமோ என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. சாயல் - மென்மை.