7. கானல்வரி





100

[ 14 ]

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே



98
உரை
101

         பொழில் தரு நறுமலரே - பொழிலால் தரப்படும் நறிய மலரும், புதுமணம் விரி மணலே - அம் மலர்களின் புதிய மணம் பரந்த மணலும், பழுதறு திரு மொழியே - அதில் நின்றவளுடைய குற்ற மற்ற இனிய மொழியும், பணை இள வனமுலையே - பருத்த இளமையாகிய அழகிய முலையும், முழுமதி புரை முகமே - நிறைமதி போலும் முகமும், முரி புரு வில் இணையே - வளைந்த புருவமாகிய இரண்டு வில்லும், எழுதரும் மின் இடையே - எழுதற்கரிய மின் போன்ற இடையும், எனை இடர் செய்தவையே - என்னைத் துன்புறுத்தியவை யாகும்;

         முரி - வளைவு. புரு - புருவம். மலர், மணல் என்பன தலைவியைக் கண்ட இடத்தையும், மொழி முதலியன தலைவியின் இயலையும் அறிவிப்பன. ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. பின்வருவனவும் இன்ன.