7. கானல்வரி

 

[ 16 ]

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே ஏனையிடர் செய்தவையே.




106
உரை
109

         வளை வளர்தரு துறையே - சங்குகள் வளரும் துறையும், மணம் விரிதரு பொழிலே - மணம் பரந்த சோலையும், தளை அவிழ் நறுமலரே - முறுக்கு விரித்த நறிய மலரும், தனி அவள்
திரிஇடமே - அவள் தனியே உலாவிய இடமும், முளை வளர் இளநகையே - முளை போல் வளரும் இளைய பல்லும், முழுமதி புரை முகமே - நிறைமதி ஒக்கும் முகமும், இளையவள் இணை முலையே - இளைமைப் பருவமுடையவளது இணைந்த முலையும்,

         எனை இடர் செய்தவை - என்னைத் துன்புறுத்தியவை யாகும்; தரு என்பதற்கு மேல் உரைத்தமை கொள்க. தனியவள் - ஒப்பற்றவளுமாம். முளை - முளைத்த என்றலுமாம். இணை -ஒன்றோடொன்று நெருங்கிய; இரண்டுமாம்.

         இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்றதுரைத்தவை.
இவை முரிவரி; அதன் இலக்கணத்தை ''எடுத்த வியலு மிசையுந் தம்மின், முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே'' என்னுஞ் சூத்திரத்தானறிக.