7. கானல்வரி



110

[ 17 ]

கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக் கிடுகும் இடைஇழவல் கண்டாய்.




110
உரை
113

         கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வர் நின் ஐயர் - நின் மூத்தோர் கடலிற் புகுந்து உயிர்களைக் கொன்று வாழா நிற்பர் ; உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை மன் நீயும் - நீயும் உடலிற் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றனை ; மிடல் புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் - வலியிலே புகுந்து நின்று அடங்காத வெவ்விய முலைகளோ பாரமாகவுள்ளன ; இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் - இடரிலே கிடந்து மெலியும் இடையை இழந்துவிடாதே ;

         ஐயர் - மூத்தோர் ; தந்தை, தமையன்மார். என்னுயிரைக் கொன்றென்க. நின்னையர் உயிர் கொன்று வாழ்வரென்றது, உயிர் கொல்வது நின் குல தருமமாக வுள்ளது என்று காட்டுதற்கு. நீ புரியும் இக் கொடுவினையால் நின் இடை முரியவுங் கூடும்; அன்றியும் நின் முலைகளோ பாரமாகவுள்ளன ; ஆதலின் உயிர்கொல்லுந் தீமையைக் கைவிட்டு, அப் பாரத்தை என் தோளி லேற்றி, நின் இடையைப் பாதுகாப்பாயாக ; என்று தலைவன் கூறினானென்க. எனது ஆற்றாமையைத் தீர் என்பது கருத்து. மன் - அசை ; மிகவும் என்றுமாம். கண்டாய், முன்னிலையசை. பின்னிரண்டு கவிகட்கும் இங்ஙனமே பொருள்கொள்க. இடர்புக்குகு மின்னிடை எனவும் பாடம்.