7. கானல்வரி







160

[ 28 ]

தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல்
                      ஒவ்வா வேனும்
வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல்
                      வருதிர் ஐய
வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம்
                      விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும்
                      புகாரே எம்மூர்.



156
உரை
163

         தீங்கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும் - இனிய கதிர்களையுடைய திங்கள் போலும் ஒள்ளிய முகத்தினையுடையாளது சிவந்த வாயின் அழகிய பற்களை இவை ஒவ்வாவாயினும், வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால் மகன் போல் வருதிர் ஐய - நீவிர் இந்த முத்துக்களை வாங்குமின் என்று கூறி, ஐயனே, நாடொறும் மயங்கின மகன் போல வாரா நிற்பீர் ; வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண்முத்தம் - ஒலி மிக்க கடலானது விளங்கும் ஒளியினையுடைய வெள்ளிய முத்துக்களைத் தந்து, விரை சூழ் கானற் பூங்கோதை கொண்டு- மணம் பொருந்திய கானலிடத்துப் பூமாலைகளைப் பெற்று, விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் - விற்பார் போல் மீளா நிற்கும் புகாரே எம்முடைய ஊராகும் ;
தீங்கதிர் - திங்கள் ; ஆகுபெயர். வாங்கும் எனச் செய்யுமென்னுஞ் சொல் முன்னிலைப்பன்மை யேவலில் வந்தது. மால் மகன் - உன் மத்தன் ; திருமாலின் மகனாகிய காமன் என்றுமாம். வருதிர் ஐய - பன்மை யொருமை மயக்கம். ஓதம் முத்தம் தந்து கோதை கொண்டு, பண்டமாற்றுச் செய்யும் விலைஞர்போல் மீளும் புகார் என்க. கோதை - வண்டல் மகளிர் களைந்திட்டன. தலைமகன் கையுறையாக முத்துக்களை நல்கினானாக, எம் மூரின்கண் கடல்தரும் முத்துக்கள் மிகுதியாக வுள்ளனவாதலின் இவை வேண்டாவெனத் தலைவி மறுத்தாளென்க.

         இது, கையுறைமறை.