7. கானல்வரி






40

[ 4 ]

உழவ ரோதை மதகோதை
    உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
    நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப
    நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
    வளனே வாழி காவேரி.




37
உரை
44

         உழவர் ஓதை - புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை - நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடை நீர் ஓதை - கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை - புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பல்வகை யோசையும், சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி - மிக்கொலிக்கச் சென்றாய் ஆதலால், காவேரி நீ வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் - நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், வாய காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி - அரணினிடத்தைக் காவாமைக்கு ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ்வாயாக ;

         வாய் - இடம். மழவரோதையாற் பகைவர் அஞ்சுந் திறத்த தாகலின் இடம் காக்க வேண்டாதாயிற்று;

1"வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள"

         என்பதன் உரை நோக்குக. அன்றி, நாவினைக் காவாது வஞ்சினங் கூறும் வீரர் என்றுமாம்; என்னை?

2"புட்பகைக், கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"

என்றாராகலின். நடந்தவெல்லாம் வளனே என்றியையும். இவை மூன்றும் ஆற்றுவரி ; கந்தருவ மார்க்கத்தால் இடைமடக்கி வந்தன. பின் இடைமடக்கி வருவனவும் இன்ன, வரிப் பாட்டுக்கள் தெய்வஞ் சுட்டுவனவும், மக்களைச் சுட்டுவனவும் என இருவகைய; அவற்றுள், இவை மக்களைச் சுட்டுவன. மற்றும், முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி யென்னும் மூன்றனுள்ளே 'திங்கண் மாலை' முதலிய மூன்றும் முகமுடை வரி யென்றும் கூறப்படும்.


1 புறம் 22.  2 புறம் 67.