7. கானல்வரி



180

[ 31 ]

புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி
இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.



180
உரை
183

         புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி - துணையோடு பொருந்தி விளையாடும் புள்ளிகளையுடைய ஞெண்டினை நோக்கி, இணர் ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி - பூங்கொத்துக்கள் செறிந்த சோலையிடத்து என்னையும் நோக்கி, உணர்வு ஒழியப் போன ஒலி திரை நீர்ச் சேர்ப்பன் - உணர்வு தன்னை நீங்கச் சென்ற ஒலிக்கும் அலையையுடைய கடற் சேர்ப்பனது, (வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்) வண்ணம் - இயல்பினை, வணர் சுரி ஐம்பாலோய் - வளைந்த கடைகுழன்ற கூந்தலையுடையாய், உணரேன் - அறிகின்றிலேன்.

         இது தோழி கூற்று. அலவன் துணையோடு ஆடுதல் போல யானும் தலைவியோடாடி இன்புறுமாறு நீயே கூட்டுவித்தல் வேண்டும் என்னுங் குறிப்பினன் என்பாள், 'அலவனோக்கி என்னையும் நோக்கிப் போன' என்றாளென்க. இது குறிப்பு நுட்பம் என்னும் அணியாகும். உணர்வொழியப் போன என்றமையால் அத்தகையாற்கு

         அருள் செய்யாதிருத்தல் தகவன்றென்பது புலப்படுத்தாளாயிற்று. சேர்ப்பன் வண்ணம் என இயையும். வண்ணம் - கருதிய தன்மை. உணரேன் என்றமையால் வலிதாகச் சொல்லினாளாம். ஆல், அசை.

         இது, தோழி வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது.