7. கானல்வரி





190

[ 33 ]

புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ.



188
உரை
191

         தபுன்கண் கூர் மாலை - வருத்தத்தை மிகுவிக்கும் மாலைப் பொழுதில், புலம்பும் என் கண்ணேபோல் - தனிமையால் வருந்தும் என் கண்ணினைப் போல, துன்பம் உழவாய் - துன்பத்தால் வருந்தாமல், துயிலப் பெறுதியால் - இனிது துயிலாநிற்கின்றாய், இன் கள் வாய் நெய்தால் - இனிய கள் திளைக்கும் வாயையுடைய நெய்தலே, நீ எய்தும் கனவினுள் - நீ எய்தா நிற்கும் கனவு நிலையில், வன்கணார் கானல் வரக் கண்டு அறிதியோ - கொடியராய தலைவர் கானலிடத்தே வராநிற்க நீ கண்டறிவாயோ ;

         நிறத்தால் என் கண்ணை யொத்திருந்தும் செய்கையால் அதனோடு மாறுபடுகின்றாய் என்றாள். துயிலல் - மொட்டித்தல். மாலைப் பொழுதில் நெய்தல் இதழ் குவியுமாதலின், அதனைத் துயிறலாகக் கருதி, என் கண் துயிலின்றி வருந்தவும் நீ துயில்கின்றாய் என்றாள் கள்ளுண்பார்க்கு இஃது இயல்பே யென்பாள் 'இன் கள் வாய் நெய்தால்' என்றாளென்க. உறங்குவார்க்குக் கனவு முண்டென்று கருதி, 'எய்துங் கனவினுள்' என்றாள். என் கண் துயிலாமையால் யான் கனவினுங் காணப் பெற்றிலேன் ; நீ கனவிலே காண்டலுண்டாயிற் கூறுக என்றபடி. இதனைக் காப்புச் சிறைமிக்க கையறு கிளவி என இறையனார் களவியலுரை யாசிரியரும், குறிபிழைத்துழித் தன்னுட் கையாறெய்திடு கிளவி என 1நச்சினார்க்கினியரும் கூறுவர்.


1. தொல், பொருள். 107--உரை