7. கானல்வரி




265

[ 49 ]

பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளின் நீழல்
இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்றா வேந்தன்
எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை.




264
உரை
267

        பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருளின் நீழல் - பிரிந்து சென்ற தலைவர் அன்புற்று உரைத்த பெரிய தண்ணளியாகிய நிழலிலே, இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப் புறத்தாய் மாலை - தனித்திருந்து இரங்கி வாழ்பவருடைய உயிரைச் சூழ்ந்துள்ளாய் மாலையே, உயிர்ப் புறத்தாய் நீ ஆகில்-உயிரைச் சூழ்ந்துள்ளாய் நீயாயின், உள் ஆற்றா வேந்தன் எயிற் புறத்து வேந்தனோடு - உள்ளிருக்கும் வலியில்லாத வேந்தனது மதிலின் புறத்துள்ள வேந்தற்கு, என் ஆதி மாலை - மாலையே நீ என்ன உறவுடையை ஆவாய் ;

        உரைத்த உரையாகிய அருளென்க. உரை - பிரியேம் என்று கூறியது. உயிர்ப் புறத்தாய் - உயிரைக் கவர்தற்கு அதனை முற்றியுள்ளாய். உள்ளாற்றா வேந்தன் - நொச்சியான் ; ஆற்றா என்றமையால் அமர் புரியும் வலியில்லாத என்றாயிற்று. எயிற் புறத்து வேந்தன் - உழிஞையான். அவனும் நீயும் புறத்தே முற்றி உயிர்கொள்வதில் ஒரு தன்மையீர் என்றபடி. வேந்தனோடு - வேந்தற்கு.