பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 101 

   இமவானில் மரகதப் பாறையில் பதுமை என்னும் கயத்தில் பொற்றாமரை மலரின்கண் திருமகள் தோன்றினள் என்பது ஆருகதர் கொள்கை.

 

   அங்கண் : உலகறி சுட்டு. நாறுதல் -தோன்றுதல். பெருமகன் எனற்து விதைய மன்னனை.

( 154 )
184 கலம்புரி யகலல்குற் றாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்தடி பரவச் செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தனள்
குலம்புரிந் தனையதோர் கொடியி னீர்மையள்.

   (இ - ள்.) குலம் புரிந்தனையது ஓர் கொடியின் நீர்மையள் - குலம் கொடியின் இயல்பை விரும்பியது போன்ற இயல்பினாள்; கலம்புரி அல்குல் தாயர் தவ்வையர்- மேகலை விரும்பின அகன்ற அல்குலையுடைய ஐவகைத் தாயரும் அவர்கள் மக்களாய்த் தனக்கு மூத்தவர்களும்; சிலம்புரி திருந்தடி பரவச் செல்பவள் - சிலம்பு விரும்பின அழகிய அடியைப் போற்ற வாழ்பவள்; வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள் - வலம்புரிச் சங்குகள் சலசஞ்சலத்தைச் சூழ்ந்திருப்பதைப் போன்றனள்.

 

   (வி - ம்.) 'சிலம்பு புரி' என்பது 'சிலம்புரி' என விகாரப்பட்டது.

 

   [சலஞ்சலம்: ஆயிரம் வலம்புரிச் சங்குகள்சூழ இருக்கும் சங்கு.]

 

   கலம் - ஈண்டு மேகலை. தவ்வையர் என்றது - செவிலியர் மக்களாகிய தமக்கைமார்களை. இவர்க்கு வலம்புரிச் சங்கங்கள் உவமை. சலஞ்சலம் : விசயைக்கு உவமை.

( 155 )
185 இன்னகிற் கொழும்புகை யுயிர்க்கு மீர்ங்குழன்
மென்மலர்க் கோதைதன் முலைகள் வீங்கலின்
மின்னுருக் குறுமிடை மெலிய மெல்லவே
கன்னிதன் றிருநலங் கனிந்த தென்பவே.

   (இ - ள்.) இன் அகில் கொழும்புகை உயிர்க்கும் ஈர்ங்குழல் மென்மலர்க் கோதைதன் முலைகள் - இனிய அகிலின் சிறந்த புகை யூட்டப்பெற்ற குளிர்ந்த குழலையும் மெல்லிய மலர்ககோதையையும் உடைய விசயையின் முலைகள்; மின் உருக்குறும் இடை மெலிய வீங்கலின் - மின்னின் வடிவத்தைக் கெடுக்கும் இடை மெலியப் பருத்தலால் ; கன்னிதன் திருநலம் மெல்லக் கனிந்தது - கன்னியாகிய அவள் அழகின் நலம் மெல்ல முதிர்ந்தது.

 

   (வி - ம்.) 'மின் நடுக்குறும் ' என்றும் பாடம். என்ப : அசை.

( 156 )