பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1040 

1837 கோற்றொடிப் புரிசையுட் கொற்றவ னின்றைய
னேற்றியல் காண்டுநா மிவட்டரு கென்னவே
காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக்
கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ.

   (இ - ள்.) கோல் தொடிப் புரிசையுள் கொற்றவன் நின்று - திரண்ட வளையலைப்போல வளைந்த மதிலிலே தடமித்தன் வந்து நின்று; ஐயன் ஏற்றியல் நாம் காண்டும் - ஐயனுடைய யானையேற்றத்தின் தன்மையை யாம் காண்போம்; இவண் தருக என்ன - இவ்விடத்தே கொண்டு வருக என்ன; காற்று எனக் கடல் எனக் கருவரை உரும் எனக் கூற்று என - விசையாற் காற்றென, ஒலியாற் கடலென, வடிவால் கரிய மலையென, அச்சத்தால் இடியெனக், கொலையாற் கூற்றுவன் என; குஞ்சரம் கொண்டு புக்கான் - யானையை உள்ளே கொண்டு சென்றான்.

   (வி - ம்.) கொற்றவன் : தடமித்தன். ஐயன்: சீவகன். ஏற்றியல் - யானை ஏறும் அழகு, காண்டும் - காண்பேம். விசையாற் காற்று எனவும் முழக்கத்தால் கடல் எனவும் வடிவால் வரையெனவும் பொதுத்தன்மை விரித்தோதுக.

( 281 )
1838 குழவியஞ் செல்வனோர் குன்றுகொண் டொய்யென
வழகிதாப் பறப்பதே போலவு மார்புயன்
மழையையூர்ந் தோடுமோர் வானவன் போலவு
மெழுதலா காவண மிருந்தன னென்பவே.

   (இ - ள்.) குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு - இள ஞாயிறு ஒரு குன்றைக் கவானிடைக் கொண்டு; ஒய் என அழகிதாப் பறப்பதே போலவும் - கடுக அழகாய்ப் பறக்கின்ற தொழிலைப்போல் தன்னிடத்தே தொழிலையுடையவனாயும்; புயல் ஆர் மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும் - நீர் நிறைந்த முகிலை யூர்ந்து செல்லும் வித்தியாதரனைப் போலத் தன்னிடத்தே தொழில் கிடக்கவும்; எழுதலாகா வணம் இருந்தனன் - எழுதலாகாதபடி இருந்தான்.

   (வி - ம்.) என்ப, ஏ : அசைகள்.

   குழவியஞ் செல்வன் என்றது ஈண்டுக் குறிப்பால் இளஞாயிற்றை உணர்த்தியது. ஓய்யென : விரைவுக் குறிப்பு. குன்று - ஈண்டு உதயகிரி.

( 282 )
1839 வனைகலத் திகிரியும் வாழுயிர் மேற்செலுங்
கனைகடுங் கதழ்பரிக் காலசக் கரமும்போல்
வினைதகு வட்டமும் வீதியும் பத்தியு
மினையவை யேமுற விமைப்பினி னியற்றினான்.