பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1062 

   (வி - ம்.) அல்குல்; குணமாலை. திருவில் - வானவில். புருவத்தையுடைய மதிபோலும் முகம் என்க. புணர் முலை : வினைத்தொகை உருவம் - அழகு, அடிச்சி என்றது குணமாலையை; நும் மடிச்சி என்ற வாறு. கொல்; ஐயப் பொருட்டு.

( 322 )
1879 நாளைவரு நையலென நன்றெனவி ரும்பி
நாளையெனு நாளணிமைத் தோபெரிதுஞ் சேய்த்தோ
நாளையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லு
நாளினுமிந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே.

   (இ - ள்.) நாளை வரும் நையல்என - சீவகன் நாளை வருவான், நீ வருந்தாதே என்று கிளிகூற ; நன்று என விரும்பி - அது நன்று என்று விரும்பி; நாளை யெனும் நாள் - நீ கூறிய நாளையென்னும் நாள்; அணிமைத்தோ? பெரிதும் சேய்த்தோ? - நெருங்கியுளதோ? மிகவும் தொலைவில் உள்ளதோ?; நாளை உரை என்று - அந் நாளைக் கூறு என்று ; கிளியோடு நகச் சொல்லும் - கிளியோடு அது நகுமாறு கூறுவாள்; இந் நங்கை துயர் நாளினும் நாளினும் இதுவே - இக் குணமாலையின் துயர் நாளினும் நாளினும் இத் தன்மைத்து

   (வி - ம்.) மற்று : அசை.

   கிளி நாளைச் சீவகன் வரும் நையல் என்று கூற என்க. நையல்; முன்னிலை ஒருமை வினைமுற்று. அணிமைத்து - அண்மையில் உள்ளது. சேய்த்து - தொலைவிலுள்ளது. ஓகாரமிரண்டும் வினா அந்நாளை யுரை எனச் சுட்டு வருவிக்க. இந்நங்கை என்றது குணமாலையை

( 323 )

வேறு

1880 நோக்கவே தளிர்த்து நோக்கா
  திமைப்பினு நுணுகு நல்லார்
பூக்கம ழமளிச் சேக்கும்
  புதுமண வாள னார்தா
நீப்பிலார் நெஞ்சி னுள்ளா
  ராதலா னினைத்தல் செய்யேன்
போக்குவல் பொழுதுந் தாந்தம்
  பொன்னடி போற்றி யென்றாள்.

   (இ - ள்.) நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார் - பார்க்கவே தளிர்த்துப் பாராமல் இமைத்தாலும் மெலியும் பெண்களின்; பூக் கமழ் அமளிச் சேக்கும் புது மணவாளனார் தாம் - மலர் மணங் கமழும் படுக்கையிலே தங்கும் புது மணவாளப் பிள்ளையார் தாம்; நீப்பிலார் நெஞ்சி