பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1116 

1980 அம்பொற் கொம்பனை யாளையும் வார்கழற்
செம்பொற் குன்றனை யானையுஞ் சீர்பெறப்
பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ
விம்ப ரில்லாதோ ரின்ப மியற்றினார்.

   (இ - ள்.) அம் பொன் கொம்பு அனையாளையும் - அழகிய பொற்கொடி போன்றவளையும்; வார்கழல் செம்பொன் குன்று அனையானையும் - கட்டிய கழலையுடைய பொன்மலை போன்றவனையும்; பைம்பொன் நீள் நகர்ப் பல் இயம் ஆர்த்து எழு - புதிய பொன்னாலமைத்த பெரிய மனையிலே பல இயங்களும் முழங்கா நிற்க; சீர் பெற - சிறப்புற; இம்பர் இல்லது - இவ்வுலகில் இல்லதாகிய; ஓர் இன்பம் இயற்றினார் - ஒப்பற்ற மணத்தைப் புரிந்தனர்.

   (வி - ம்.) மணத்தை இன்பம் என்றது கருவி ஆகுபெயர்.

   கொம்பனையாள் : விமலை. குன்றனையான் : சீவகன். பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். இம்பர் - இவ்வுலகம். இன்பம் இயற்றினார் என்றது. திருமணம் இயற்றினர் என்றவாறு.

( 92 )
1981 கட்டி லேறிய காமரு காளையும்
மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்
விட்டு நீங்குத லின்மையின் வீவிலா
ரொட்டி யீருடம் போருயி ராயினார்.

   (இ - ள்.) கட்டில் ஏறிய காமரு காளையும் - கட்டிலில் அமர்ந்த விருப்பம் வருதற் கான காளையும்; மட்டு வாய் அவிழ் மாமலர்க் கோதையும் - தேன் பொருந்திய வாய் மலர்ந்த பெருமை பொருந்திய மலர்க் கோதையாளும்; விட்டு நீங்குதல் இன்மையின் - விட்டு நீங்கி நுகரும் தன்மை இல்லாமையால்; வீவு இலார் - கெடுதல் இல்லாதவராய்; ஒட்டி ஈருடம்பு ஓர் உயிர் ஆயினார் - மனம் ஒன்றி ஈருடம்பும் ஓருயிரும் என ஆயினார்.

   (வி - ம்.) 'கட்டில் ஏறிய - பிணைப்பினையுடைய இல்வாழ்க்கையிலே, சென்ற' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்!

   கட்டிலேற்றுதல் ஒரு சடங்கு. மட்டு - தேன். கோதை : விமலை. உயிர் ஒன்றெனவே மனமுமொன்றென்பது போதரும்.

( 93 )
1982 நிலவு வெண்கதிர் நீர்மைய பூந்துகில்
கலவங் கண்புதை யாது கனற்றலி
னுலக மூன்று முறுவிலைத் தென்பவே
புலவு வேற்கண்ணி னாண்முலைப் போகமே.