பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1149 

வேறு

2040 இனிச்சிறி தெழுந்து வீங்கி
  யிட்டிடை கோறு நாங்க
ளெனக்கொறு கொறுப்ப போலு
  மிளமுலைப் பரவை யல்குற்
கனிப்பொறை மலிந்த காமர்
  கற்பக மணிக்கொம் பொப்பாள்
பனிப்பிறைப் பூணி னான்றன்
  பாண்வலைச் சென்று பட்டாள்.

   (இ - ள்.) இனி நாங்கள் சிறிது எழுந்து வீங்கி இட்டிடை கோறும் என - இந் நிலையில் நாங்கள் சிறிது எழுந்து பருத்துச் சிற்றிடையைக் கொல்வோம் என்று; கொறுகொறுப்ப போலும் இளமுலை - கொறுகொறுப்பன போலும் இளமுலையினையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; கனிப்பொறை மலிந்த காமர் கற்பக மணிக்கொம்பு ஒப்பாள் - பழமாகிய சுமை மிகுந்த அழகிய கற்பகக் கொம்பு போல்வாள்; பனிப்பிறைப் பூணினான் தன் பாண்வலைச் சென்று பட்டாள் - குளிர்ந்த பிறை யனைய பூணையுடைய சீவகனின் இசை வலையிலே போய் அகப்பட்டாள்.

   (வி - ம்.) கொறுகொறுத்தல் : சினத்தலை உணர்த்தும் குறிப்புச் சொல்லாகிய இரட்டைக் கிளவி.

   கோறும் : தன்மைப் பன்மை வினைமுற்று. கனிப்பொறை : பண்புத்தொகை. காமர் - அழகு. ஒப்பாள் : சுரமஞ்சரி. பூணினான் : சீவகன். பாண்வலை : பண்புத்தொகை. பாண் - பாட்டு.

( 46 )
2041 அடிக்கல மரற்ற வல்குற்
  கலைகலந் தொலிப்ப வந்து
முடிப்பதென் பெரிது மூத்தேன்
  முற்றிழை யரிவை யென்ன
வடிக்கணா ணக்கு நாணித்
  தோழியை மறைந்து மின்னுக்
கொடிக்குழாத் திடையோர் கோலக்
  குளிர்மணிக் கொம்பி னின்றாள்.

   (இ - ள்.) முற்றிழை அரிவை! அடிக்கலம் அரற்ற அல்குல் கலை கலந்து ஒலிப்ப வந்து முடிப்பது ஏன்? பெரிதும் மூத்தேன் என்ன - முற்றிழையுடைய அரிவையே! அடியில் அணிந்த சிலம்பு முதலியன ஒலிக்கவும், அல்குலில் அணிந்த கலைகள் கலந்து