பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 118 

   கூறிய செல்வ நிலையாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையாமையையும் நிலையாமை என ஒருமையாக்கி 'அது' என ஒருமையாற் கூறினான். உரையல் என்றான் நிமித்திகனை நோக்கி, அவன் உரியன் ஆதலின்.

( 184 )
214 மூரித்தேந் தாரி னாய்நீ முனியினு முறுதி நோக்கிப்
பாரித்தேன் றரும நுண்ணூல் வழக்கது வாதல் கண்டே
வேரித்தேங் கோதை மாதர் விருந்துனக் காக வின்பம்
பூரித்தேந் திளைய கொங்கை புணர்கயான் போவ லென்றான்.

   (இ - ள்.) மூரித்தேன் தாரினாய் - பெருமையுடைய தேன் பொருந்திய மாலையினாய்; தரும நுண்ணூல் வழக்குஅது ஆதல் கண்டு உறுதி நோக்கிப் பாரித்தேன் - நுண்ணிய அறநூலின் ஆணை இடித்துக் கூறல் அமைச்சர்க்கு இயல்பு என்பதை உணர்ந்து, நின்நலத்தை நோக்கி இதுவரை பரக்கக் கூறினேன்; வேரித்தேன் கோதை மாதர் பூரித்து ஏந்து இளைய கொங்கை விருந்து இன்பம் உனக்காகப் புணர் - மணமுறு தேன் பொருந்திய மாலையணிந்த மாதரின் பூரித்து ஏந்திய இளைய கொங்கையின் புதிய இன்பம் உனக்குக் கிடைக்குமாறு புணர்க ; நீ முனியினும் யான் போவல் என்றான் - நீ என்னை வெறுத்தாலும் (நின்தவறு காணாமல்) யான் துறவிடத்தே செல்வேன் என்று நிமித்திகன் கூறினான்.

 

   (வி - ம்.) மூரி பண்பு மாத்திரம் உணர்த்தாது பெயராதலின், வேற்றுமைத் தொகை. முனியினும் என்பது எதிர்காலம் உணர்த்தும் எச்சம்; உம்மை ஐயம். 'இளைய கொங்கை' என்று இளமை நிலையாமை கூறினான். அரசன் போவென்னாமல் தானே போவேன் என்றல் நீதியின்மையின், துறவு உட்கோள் ஆயிற்று. 1இதனான், 'வெளிறிலாக் கேள்வியான்' (சீவக. 27) என்றார்.

 

   'களிறனான்' (சீவக. 27) முதல் இத்துணையும் ஒரு தொடர்.

 

   பாரித்தல் - மிக மிக விரித்துப் பேசுதல். 'தரும நுண்ணூல்' என்றது திருக்குறளை. அதன்கண் கூறப்படுவது.

 
  ”அறிகொன் றறியான் எனினும் உறுதி  
  உழையிருந்தான் கூறல் கடன்” (குறள், 638)  

   என்பது.

( 185 )

வேறு

 
215 இனமா மென்றுரைப் பினுமே தமெணான்
முனமா கியபான் மைமுளைத் தெழலாற்
புனமா மலர்வேய் நறும்பூங் குழலாண்
மனமா நெறியோ டியமன் னவனே.

1. வெளிறிலாக் கேள்வியான் நிமித்திகனென நச்சினார்க்கினியர் கருதியது முற்கூறப்பட்டது.