பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1181 

   (இ - ள்.) நாணொடு மிடைந்த தேன்கொள் நடுக்குஉறு கிளவி கேட்டு - நாணுடன் கலந்த இனிமை கொண்ட அச்சம் பொருந்திய மொழியைக் கேட்டு; தேன்மிடை கோதை - தேன் மிகுந்த கோதாய்!; புனைநலம் புலம்ப வைகேன் - ஒப்பனையுறும் நின் அழகு வருந்தத் தங்கியிரேன்; என்று - எனக் கூறி; பூண்வடு பொறிப்பப் புல்லி - தன் மார்பில் அணிந்த பூணின் வடு அவள் மார்பில் பொருந்தத் தழுவி; திருமகன் எழுந்து போகி - சீவகன் எழுந்து சென்று; வாள்மிடை தோழர் சூழத் தன்மனை மகிழ்ந்து புக்கான் - வாள் நெருங்கிய தோழர் சூழ்ந்துவரத் தன் இல்லத்தே மகிழ்வுடன் புகுந்தான்.

   (வி - ம்.) மிடைந்த - கலந்த. தேம் - இனிமை. வைகேன் : தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று. திருமகன் : சீவகன்.

( 100 )
2095 புரவியுங் களிறு நோக்கிப்
  பொன்னெடுந் தேரு நோக்கி
யிரவினும் பகலு மோவா
  தென்மகன் யாண்டை யானென்
றழுதகண் ணீரி னாலே
  கைகழீஇ யவலிக் கின்ற
மெழுகெரி முகந்த தொக்குந்
  தாய்மெலி வகற்றி னானே.

   (இ - ள்.) புரவியும் களிறும் நோக்கி - குதிரைகளையும் யானைகளையும் பார்த்து; பொன் நெடுந்தேரும் நேக்கி-பொன்னாலாகிய நீண்ட தேரையும் பார்த்து; இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையான் என்ற - இரவும் பகலும் ஒழிவின்றி என் மகன் எங்கேயுளான் என்று; அழுத கண்ணீரினாலே கைகழீஇ அவலிக்கின்ற - அழுத கண்ணீரைக் கொண்டு கையைக் கழுவி வருந்துகின்ற; மெழுகு எரிமுகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினான் - மெழுகு நெருப்பை அணைந்தாற் போல நெஞ்சுருகுகின்ற அன்னையின் வருத்தத்தை அகற்றினான்.

   (வி - ம்.) ”இருடிகூற்றைச் சிந்தித்திருத்தலின் கந்துகன் மெலிவையகற்றினானெனல் வேண்டாவாயிற்று” என்னும் நச்சினார்க்கினியர் குறிப்பு நுணுக்கமிக்கது.

( 101 )
2096 ஒற்றரு முணர்த லின்றி
  யுரையவித் துறுப்பி னாலே
சுற்றத்தார்க் குரைப்ப வேண்டித்
  தொக்குடன் றழுவிக் கொள்வா