பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1311 

2320 கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை
  யம்பி னெய்தான்
வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப்
  பூணி னானே.

   (இ - ள்.) ஆங்குத் தொடுத்த அவ் அம்பு தொடை வாங்கி - ஆங்குத் தொடுத்த அந்த அம்பைத் தொடையை நிரம்ப வாங்கி; விடாத முன்னம் விடுவதற்கு முன்னே; அடுத்து ஆங்கு அவ்வம்பும் சிலையும் அதன் நாணும் அற்று - உடனே அங்கே அந்த அம்பும் வில்லும் வில்லின் நாணும் அறுபட்டு; கடுத்து ஆங்கு வீழக் கதிர் வான்பிறை அம்பின் - சினந்தாற்போல விழும்படி ஒளி பொருந்திய சிறந்த பிறைக்கணையால்; வடிதாரை வெள்வேல் வயிரம் மணிப் பூணினான் - வடித்த நீண்ட வெள்வே லேந்திய வயிர மணிக்கலன் அணிந்த சீவகன்; எய்தான் - அடித்தான்.

   (வி - ம்.) 'வடித்த தாரை' என்பது, 'வடித்தாரை' என விகாரப் பட்டது என்பர் நச்சினார்க்கினியர். கடுத்து - கடுகி எனலுமாம்.

( 219 )
 2321 அம்புஞ் சிலையு மறுத்தானென்
  றழன்று பொன்வாள்
வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன்
  தேரின் மேலே
பைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு
  கென்று பாய்வான்
செம்பொன் னுலகி னிழிகின்றவொர்
  தேவ னொத்தான்.

   (இ - ள்.) அம்பும் சிலையும் அறுத்தான் என்று - அம்பையும் வில்லையும் சீவகன் அறுத்தான் என்று; பைம்பொன் முடியான் அழன்று - பொன்முடியணிந்த கட்டியங்காரன் சினந்து; பொன்வாள் வெகுண்டு வெம்பப் பிடித்து - பொன்வாளை அழன்று வெம்பும்படி ஏந்தி, ஆங்கு அவன் தேரின்மேலே படப் பாய்ந்திடுகு என்று - அங்கே சீவகன் தன் தேரின் மேலேயே பட்டுக்கிடக்கப் பாய்ந்திடுவேன் என்று; பாய்வான் - பாயுங் கட்டியங்காரன்; செம்பொன் உலகின் இழிகின்ற ஒர்தேவன் ஒத்தான் - பொன்னாட்டிலிருந்து இறங்கி வருகின்ற ஒரு வானவனைப் போன்றான்.

   (வி - ம்.) யானையினின்றும் கீழே பாய்கின்றவன், நல்வினைகெட்டு, வானினின்றும் தள்ளப்படுகின்றவன் போன்றான்.

( 220 )