பக்கம் எண் :

பூமகள் இலம்பகம் 1326 

2344 மாலே றனையா னொடுமக்களுக் கஃதோ வென்னா
வேலேறு பெற்ற பிணையின்னனி மாழ்கி வீழ்ந்து
சேலேறு சின்னீ ரிடைச்செல்வன போன்று செங்கண்
மேலேறி மூழ்கிப் பிறழ்ந்தாழ்ந்த விறந்து பட்டாள்.

   (இ - ள்.) மால்ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா - மயங்கிய ஏறுபோன்றானுக்கும் அவன் மக்களுக்கும் அஃதோ நோர்ந்தது என்று; வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து - வேலால் தாக்கப்பெற்ற பெண்மான்போல மிகவும் வருந்தி வீழ்ந்து; சேல் ஏறு சின்னீரிடைச் செல்வன போன்று - சேல்மீன் வற்றிய சின்னீரிலே (கடிதிற் செல்லாமல்) மெல்லச் செல்வனபோல; செங்கண் மேல் ஏறி மூழ்கிப் பிறழ்ந்து ஆழ்ந்த - சிவந்த கண்கள் மெல்ல மேலே ஏறி மறிந்து கீழ்மேலாய் வீழ்ந்தன; இறந்து பட்டாள் - உடனே அவளும் இறந்து விட்டாள்.

   (வி - ம்.) யாவன் என்று வினாவ இறந்து பட்டாள் என்று விடையிறுத்தனர். அஃதோ என்றது. 'மன்னர் தீ ஈண்டு தம் கிளையோடு எரித்திடும்' (சீவக. 250) என்று அமைச்சர் கூற, அவன் கேளாதிருந்தமை தான் கேட்டிருத்தலின், அது பின்பு பயந்தபடியோ என்றான். மால் - பெருமையுமாம்.

( 18 )
2345 ஐவா யரவி னவிராரழல் போன்று சீறி
வெய்யோ னுயிர்ப்பின் விடுத்தேனென் வெகுளி வெந்தீ
மையா ரணல மணிநாகங் கலுழன் வாய்ப்பட்
டுய்யா வெனநீ ருடன்றுள்ள முருகல் வேண்டா.

   (இ - ள்.) ஐவாய் அரவின் அவிர் ஆரழல் போன்று - ஐந்தலை நாகத்தின் விளங்கும் நிறைந்த நஞ்சுபோல; சீறி வெய்யோன் உயிர்ப்பின் என் வெகுளி வெந்தீ விடுத்தேன் - (யானும்) முதலிற் சீறிக் கட்டியங்காரன் இறந்த பின்னர் என் சீற்றமாகிய தீயையும் போகவிட்டேன்; மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்ப் பட்டு உய்யா என - கருமை நிறைந்த கழுத்தையுடைய, மணியுடைய பாம்பு கலுழனின் வாய்ப்பட்டுப் பிழையாதன போன்று; நீர் உடன்று உள்ளம் உருக வேண்டா - (நாமும் இனி உய்ய மாட்டோம் என்று) நீர் வருந்தி மனம் உருகுதல் வேண்டா.

   (வி - ம்.) பாம்பினது நஞ்சு ஒன்றற்கு உயிருள்ளளவும் வெகுண்டு, அவ்வுயிர் போய பின்பு அவ் வெகுட்சி நீங்குமாறுபோல, யானும் கட்டியங்காரன் உயிர்போமளவும் வெகுண்டு, அவனுயீர் போய பின்னர் அவ் வெகுளியை விட்டேன் என்றாள்.

( 19 )