பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1454 

2580 ஏக வெண்குடை யின்னிழற் றண்ணளி
மாக மாய்க்கட லெல்லை நிழற்றலாற்
போக பூமியும் பொன்கிளர் பூமியு
நாகர் நாகமு நாணி யொழித்தவே.

   (இ - ள்.) ஏக வெண் குடை மாகமாய்க் கடல் எல்லை தண் அளி இன் நிழல் நிழற்றலால் - தனியாகவே வெண்கொற்றக் குடை வானாகப் பரவி உலகிடைத் தண்ணிய அருளாகிய இனிய நிழலை நிழற்றுதலால்; போக பூமியும் பொன்கிளர் பூமியும் நாகர் நாகமும் - உத்தர குருவும் பொன் கிளரும் வானவருலகும் நாகருடைய நாகலோகமும்; நாணி ஒழித்த - நாணுற்றுத் தம் பெருமையை விட்டன.

   (வி - ம்.) ஏகவெண்குடை - ஒற்றைக்குடை. போகபூமி - உத்தர குரு. பொன்கிளர் பூமி - வானவர் உலகம். நாகர் நாகம் - நாகர்கள் உறையும் நாகலோகம். தம் பெருமையை ஒழித்த என்க.

( 203 )
2581 வண்டு மேய்ந்து வரிமுரல் பூஞ்சிகைக்
கெண்டை வென்றகண் ணார்களுங் கேள்வரு
முண்டு மூத்திடை யூறிலர் சேறலாற்
பண்டை யூழியிற் பார்மலி வுற்றதே.

   (இ - ள்.) வண்டு மேய்ந்து வரி முரல் - வண்டுகள் தேனைப் பருகி இசை பாடுகின்ற; பூஞ்சிகைக் கெண்டை வென்ற கண்ணார்களும் - பூவணிந்த கூந்தலையுடைய கெண்டையை வென்ற கண்ணியரும்; கேள்வரும் - அவர்தம் காதலரும்; உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால் - நுகர்ச்சி பெற்று முறையே முதிர்ந்து (மக்களாயுளில்) இடையூறில்லாமற் செல்லுதலாலே; பண்டை ஊழியின் பார் மலிவுற்றது - நிலவுலகு முதலூழி போல நிறைவு பெற்றது.

   (வி - ம்.) வரி - இசைப்பாடல். முரலுதற்கிடமான பூஞ்சிகை என்க. கேள்வர் - அவர்தம் கணவன்மார். பண்டையூழி - முகலூழி; அது கிருதயுகம். பார் உலகம் முதலூழியில் மாந்தர் நிறைவாழ் நாளுடன் குறைவொன்றுமின்றி வாழ்ந்தனரென்ப.

( 204 )

வேறு

2582 செருநாடு செஞ்சுடர்வேற்
  றிருகுசெம்பொற் கனைகழற்காற்
றிருநாடு தேம்பைந்தார்ச்
  செல்வன்செவ்வி பெறாதொழிந்து