பக்கம் எண் :

                       
முத்தி இலம்பகம் 1499 

வேறு

 
2651 முழுதுல கெழிலேத்து மூரிவேற் றானை மன்னன்
றொழுதகு பெருமாட்டி தூமணிப் பாவை யன்னாள்
பொழிதரு மழைமொக்குட் போகம்விட் டாசை நீக்கி
வழிவரு தவமெய்தி வைகின டெய்வ மன்னாள்.

   (இ - ள்.) எழில் முழுது உலகு ஏத்தும் - அழகை உலகு முழுதும் போற்றும்; மூரி வேல் தானை மன்னன் தொழுதகு பெருமாட்டி - பெருமை பெற்ற வேற்படை வேந்தனாகிய சச்சந்தனின், வணங்கத்தக்க பெருமாட்டி; தூமணிப் பாவை அன்னாள் - தூய மணிப்பாவை போன்றவள்; தெய்வம் அன்னாள் - அருந்ததி போன்றவளாகிய விசயை; பொழிதரு மழை மொக்குள் போகம்விட்டு - பெய்யும் மழை நீரில் தோன்றுங் குமிழிபோலும் இன்பத்தை விடுத்து; ஆசை நீக்கி - அவாவை வெறுத்து; வழிதரு தவம் எய்தி வைகினள் - வீட்டை அடையும் வழியிலே வருகின்ற பரமாகமத்திற்கூறிய தவத்தைப் பொருத்தித் தங்கினள்.

 

   (வி - ம்.) 'பாவை யன்னாள்' என்றார், ஐம் பொறி நுகர்ச்சியை விட்டுத் தவம் புரிந்தமை கருதி.

 

   அருகனாகமத்திற் கூறியவன்றி மற்றையவர் தவங்கள் வீடு பேற்றிற்குரியவல்ல எனலாயின.

( 53 )

2.நீர் விளையாட்டணி

 
2652 உடைதிரை முத்தஞ் சிந்த வோசனிக் கின்ற வன்னம்
படர்கதிர்த் திங்க ளாகப் பரந்துவான் பூத்த தென்னா
வடர்பிணி யவிழு மாம்ப லலைகடற் கானற் சோ்ப்பன்
குடைகெழு வேந்தற் கிப்பா லுற்றது கூற லுற்றேன்.

   (இ - ள்.) உடை திரை முத்தம் சிந்த - முரிகின்ற அலைகள் முத்துக்களை் சிந்துகையாலே; ஓசனிக்கின்ற அன்னம் - அதற்கு வெருவிச் சிறைகளை அடித்துக் கொள்ளும் அன்னம்; படர் கதிர்த் திங்கள் ஆக - பரவிய கதிர்களையுடைய திங்களாக; பரந்து வான் பூத்தது என்னா - கடல் வானாக, அது சிந்தின முத்தம் அவ் வான் மீனைப் பூத்ததாக உட்கொண்டு; ஆம்பல் அடர்பிணி அவிழும் - அல்லிமலர் (பகற் காலத்திலேயே) இதழ் பிணித்த பிணி மலர்கின்ற ; அலைகடல் கானல் சேர்ப்பன் - அலை கடலும் கானலும் கொண்ட சேர்ப்பனாகிய; குடைகெழு வேந்தற்கு - குடையுடைய சீவக மன்னற்கு; இப்பால் உற்றது கூறல் உற்றேன் - இனி நிகழ்ந்ததைக் கூறத் தொடங்கினேன்.