பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1583 

யும் அடியையும் பார்த்தால் தாமரை மலர்ந்ததைப்போன்றிருக்கும்; செங்கண் பங்கயம் அனைய - சிவந்த கண்கள் செந்தாமரை மலரைப் போல்வன; செவ்வாய் பகுவொளிப் பவழம் - சிவந்த வாய் பேரொளியையுடைய பவழத்தையொக்கும்; செங்கதிர் முறுவல் முத்தின் தெளிநகை திகழும் - நல்லொளியையுடைய முறுவலிலே முத்துக்களின் தெளிந்த ஒளிவிளங்கும்; செய்யாள் வெங்கடை மழைக்கண் நோக்கி வெய்து உறத்திரண்ட - திருமகளுடைய மழைக் கண்களின் வெவ்விய கடை நோக்கி நோக்கிப் (பொறாமையால்) வெம்மையுற (வானமங்கையரின் உறுப்புக்கள்) அழகு திரண்டன.

   (வி - ம்.) இது தேவருள் மகளிர் இயல்பு கூறிற்று. பங்கயம் தாமரை. பகுவொளி - பேரொளி. முறுவல் - புன்சிரிப்பு; பற்களுமாம். செய்யாள் - திருமகள். திருமகள் இவரழகைப் பெற்றிலேன் என்று வெய்துற என்க

( 203 )
2802 தாணெடுங் குவளைக் கண்ணித்
  தளையவிழ் கோதை மாலை
வாண்முடி வயிர வில்லும்
  வார்குழை சுடரு மார்பிற்
பூணிடை நிலவு மேனி
  மின்னொடு பொலிந்த தேவ
ரூணுடை யமிர்தம் வேட்டா
  லுண்பது மனத்தி னாலே.

   (இ - ள்.) தாள் நெடுங் குவளைக் கண்ணி - நீண்ட தாளையுடைய குவளை மலர்களால் ஆகிய கண்ணியையும் ; தளை அவிழ் கோதை - (மார்பில்) இதழ் விரிந்த மலர் மாலையையும்; மாலை - (நெற்றி) மாலையையும்; வாள் முடி வைர வில்லும் - ஒளி பொருந்திய முடியில் உள்ள வைரக்கதிரையும்; சுடரும் வார் குழை - ஒளிரும் நீண்ட குழையையும்; மார்பின் பூணிடை நிலவும் - மார்பிலே அணியிடை நிலவினையும்; மேனி மின்னொடு பொலிந்த தேவர் - நிறம் மின்னையும் கொண்டு பொலிவுற்ற அவ்வானவர்; ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பதும் மனத்தினால் - உண்ணுந் தொழிலையுடைய அமிர்தத்தை விரும்பினால் உண்பதும் மனத்தாலேயே!

   (வி - ம்.) தளை - கட்டு. கண்ணி, கோதை, மாலை என்பன மலர் மாலை வகைகள். ஊண்உடை - உண்ணுதலையுடைய. மனத்தினாலே உண்பர் என்றது நம்போன்று கையாலும் வாயாலும் உண்ணார் என்பது படநின்றது

( 204 )