பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1638 

   (இ - ள்.) கிளிச்சொலின் இனிய சொல்லார் - கிளிமொழி போலும் இனிய மொழியினாருடைய கிண்கிணி சிலம்பொடு ஏங்க - கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க; இரண்டு கோலக் கொழுங்கயல் நீர் குளித்துப் பிறழ்பவேபோல் - இரண்டு ஒப்பனையுற்ற கொழுவிய கயல்மீன்கள் நீரிற் குளித்துப் பிறழ்கின்றனவே போல; வாள் கண் களித்து நீர்சுமந்து கலாய்ப் பிறழ்ந்து அலமந்து ஆட - ஒளியுறுங் கண்கள் களித்து உவகை நீரைச் சுமந்து பிணங்கிப் பிறழ்ந்து அலமந்து ஆட:   அளித்த - முன்னர் அவர்களுக் கருளிய; தார் அலங்கல் ஆழியவன் - தாரணிந்தவனும், மாலையையுடைய ஆழியேந்தியவனும் ஆகிய சீவகனின்; துறவு உரைத்தும் - துறவை இனிக் கூறுவோம்.

   (வி - ம்.) இரண்டு கயல் நீரிலே குளித்துப் பிறழ்பவைபோலக் கண்கள் களித்து உவகைக் கண்ணீரைச் சுமந்து பிறழ்ந்து கலாய்த்து அலமந்தாடவென்க. இது நுதலிப்புகுதல் என்னுமுத்தி; ஆசிரியர் கூற்று.

( 300 )
2899 புனைமருப் பழுந்தக் குத்திப்
  புலியொடு பொருது வென்ற
கனைகுர லுருமுச் சீற்றக்
  கதழ்விடை யுரிவை போர்த்த
துனைகுரன் முரசத் தானைத்
  தோன்றலைத் தம்மி னென்றா
னனைமல ரலங்கற் கண்ணி
  நந்தனுந் தொழுது சோ்ந்தான்.

   (இ - ள்.) புனை மருப்பு அழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற - சீவின கொம்பு அழுந்துமாறு குத்திப் புலியொடு போர்புரிந்து வென்ற; கனைகுரல் உருமுச் சீற்றக் கதழ்விடை உரிவை போர்த்த - மிக்க குரல் இடிபோலும் சீற்றமிக்க எருதின் தோலைப் போர்த்த; துனைகுரல் முரசத்தானைத் தோன்றலைத் தம்மின் என்றான் - செறிந்த ஒலியுற்ற முரசினையும் படையையுமுடைய நந்தட்டனை அழைத்து வம்மின் என்று சீவகன் பணித்தான்; நனைமலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான் - தேனையுடைய மலர்மாலையையும் கண்ணியையும் உடைய நந்தட்டனும் வணங்கி வந்தான்.

   (வி - ம்.) தம்மினென்றான் என்னும் பயனிலைக்குச் சீவகன் என்னும் எழுவாய் வருவித்தோதுக. “ஏற்றுரி போர்த்த இடியுறழ்தழங்குரல் ...........கொற்றமுரசம்“ (2 - 2 : 28 - 9) என்றார் பெருங்கதையினும். ஆனேற்றின் சிறப்புக் கூறுவர் ‘புலியொடு பொருதுவென்ற‘ என்றனர்.

( 301 )