பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1673 

   கொள்க. இதனாற் கனகமாலையைத் துறந்த ஆற்றாமை கூறப்பட்டது.

( 362 )
2961 பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின்
மின்னி னிடைநுடங்க நின்றாடன் வேனெடுங்கண்
மன்ன னகரெல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்
கின்னே யொளியிழந்த வின்னா விடுகினவோ.

   (இ - ள்.) பொன் நகர வீதி புகுந்தீர் - அழகிய இராசமாபுரத்துத் தெருவிலே புகுந்த நீர்; பொழி முகிலின் மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் - நீர் பெய்யும் முகிலிலே மின் போல இடை அசைய நின்ற விமலையின்; வேல் நெடுங்கண் மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்கு - வேலனைய நீண்ட கண்கள் இவ்விராசமாபுரம் முற்றும் சூழ்போத அவ்வலையிலே அகப்பட்ட நுமக்கு; இன்னே ஒளியிழந்து இன்னா இடுகின்வோ? - இப்படியே ஒளிகெட்டுத் துன்பத்தாற் குறைந்தனவோ?

   (வி - ம்.) பொழி முகில் கூறினார் மிக விளங்குதற்கு. மன்னன் நகர் - இராசமாபுரம். மன்னன் : சச்சந்தன். 'மன்னநகர்' எனின், மன்ன: விளி : ஒருமை பன்மை மயக்கம். 'மன்ன' என்ற ஒருமையுடன் 'புகுந்தீர், அகப்பட்டீர்' எனப் பன்மை மயங்கினதால் 'போர்ப்ப' என்றது, 'எங்கெங்கே தோன்றினும் அங்கங்கே தோன்றுமே' (சீவக.1971) என்றதனை. இதனால் விமலையின் நிலை கூறப்பட்டது.

( 363 )
2962 செங்கச் சிளமுலையார் திண்கறையூர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீமகிழ்ந்து
பங்கயமே போல்வாளைப் பார்ப்பானாய்ப் பண்ணணைத்துத்
தங்கினாய் கோவே துறத்த றகவாமோ.

   (இ - ள்.) கோவே! - அரசே!; செங்கச்சு இளமுலையார் - சிவந்த கச்சணிந்த இள முலையினாரும்; திண்கறையர் பல்லினார் - (முதுமையாற்) கறைபோக விளக்கமாட்டாத பற்களையுடைய வரும் ஆகிய; மங்கையர்கள் காப்ப - பெண்டிர்கள் காக்க; மகிழ்ந்தாளை - மகிழ்ந்த சுரமஞ்சரியை; பங்கயமே போல்வாளை - (ஞாயிற்றை நோக்கும்) தாமரையே போல நின்னையே நோக்கியவளை; நீ மகிழ்ந்து பார்ப்பானாய்ப் பண் அணைத்துத் தங்கினாய் - நீயும் விரும்பிப் பார்ப்பானாய்ச் சென்று இசையாலே தழுவித்தங்கினாய்; துறத்தல் தகவாமோ? - இனி, இவ்வாறு துறத்தல் நினக்குத் தகுதியோ?

   (வி - ம்.) பங்கயமே போல்வாள் என்றார் கற்புக் கடம்பூண்ட சிறப்பு நோக்கி. 'பண்ணலைத்து' என்ற பாடத்திற்குப், 'பண்ணாலே அவள் வன்மையை நெகிழ்ந்து' என்று பொருள் கொள்க. இதனாற் சுரமஞ்சரியின் நிலை கூறப்பட்டது.

( 364 )