பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1720 

3049 மைபொதி குவளை வாட்கண்
  மல்லிகைக் கோதை நல்லார்
நெய்பொதி நெஞ்சின் மன்னர்
  நிலம்பிறக் கிடுவ போலுங்
கொய்சுவற் புரவி மான்றோ்
  குழுமணி யோடை யானை
மெய்பொதிந் துயர்ந்த கோமான்
  விரைப்பலி சுமந்த வன்றே.

   (இ - ள்.) மை பொதி குவளை வாள் கண் - மை தீட்டிய குவளை மலர்போலும் ஒளிவீசுங் கண்களையும்; மல்லிகைக் கோதை நல்லார் - மல்லிகை மாலையையும் உடைய மங்கையரும்; நெய்பொதி நெஞ்சின் மன்னர் - அன்பு பொதிந்த நெஞ்சினையுடைய மன்னரும் (அமர்ந்து ஏந்திவர); நிலம் பிறக்கிடுவ போலும் கொய் சுவல் புரவி மான்தேர் - நிலம் புறங்காட்டியோடுவனபோல் விரைந்து செல்லும், கொய்த பிடரி மயிரையுடைய குதிரைகள் பூட்டிய தேரும்; குழுமணி ஓடை யானை - தொகுதியான மணிகளிழைத்த ஓடையையுடைய யானைகளும்; மெய் பொதிந்து உயர்ந்த கோமான் - உண்மையறிவு பொதிந்து மேம்பட்ட அருகப்பெருமானுக்காக; விரைப்பலி சுமந்த - மணப்பொருள்களைச் சுமந்தன.

   (வி - ம்.) விரைப்பலிகள் முன்னிரண்டு செய்யுளிலுங் கூறப்பட்டன. விரைப்பலிகளை மன்னரும் மங்கையரும் ஏந்தி அமர யானைகளும் தேர்களும் சுமந்து சென்றன.

   நெய் : நேயம் என்பதன் விகாரம். 'நெய் பொதி குஞ்சி' என்றும் பாடம். இப்பாடத்திற்கு நெய் : கத்தூரி.

( 451 )
3050 கொடிக்குழாங் குஞ்சி பிச்சக்
  குழாநிறை கோல மாலை
முடிக்குழா மூரி வானம்
  பால்சொரி கின்ற தொக்குங்
குடைக்குழா மிவற்றின் பாங்கர்க்
  குளித்தது குளிர்சங் கார்க்கும்
படைக்குழாம் பாரிற் செல்லும்
  பாற்கடல் பழித்த வன்றே.

   (இ - ள்.) கொடிக்குழாம் - கொடித் தொகுதியும்; குஞ்சி - குஞ்சித் தொகுதியும்; பிச்சக் குழாம் - பிச்சத்தொகுதியும்; நிறைகோலம் மாலை முடிக்குழாம் - நிறைந்த அழகிய மாலையை