பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1727 

33.கேவலோற்பத்சி

வேறு

3062 முல்லைசூழ் முல்லை வேலி
  முயலொடு கவரி மேயுங்
கொல்லைசூழ் குன்றத் துச்சிக்
  குருசினோற் றுயர்ந்த வாறும்
வில்லுமிழ்ந் திலங்கு மேனி
  விழுத்தவ நங்கை மார்கண்
மல்லலங் குமரர் வான்மேற்
  சென்றதும் வகுக்க லுற்றேன்.

   (இ - ள்.) முல்லை சூழ் முல்லைவேலி - முல்லை படர்ந்த வேலியையுடைய; முயலொடு கவரி மேயும் - முயலும் கவரியும் மேய்கின்ற; கொல்லைசூழ் குன்றத்து உச்சி - கொல்லை சூழ்ந்த மலையுச்சியிலே நின்று; குருசில் நோற்று உயர்ந்த ஆறும் - சீவகன் நோற்று உயர்ந்த படியையும்; வில் உமிழ்ந்து இலங்கும் மேனி விழுத்தவ நங்கைமார்கள் - ஒளி வீசி விளங்கும் மேனியையுடைய, சிறந்த தவம் புரிந்த அரிவையர்களும்; மல்லல் அம் குமரர் - திண்ணியவர்களான நந்தட்டன் முதலானோரும்; வான்மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன் - வானிடை போயதும் கூறலுற்றேன்.

   (வி - ம்.) முல்லைவேலி என்புழி முல்லை வாளா இயற்கையடையாய் நின்றது. முல்லைவேலிக் கொல்லை, கவரிமேயும் கொல்லை எனத் தனித்தனி கூட்டுக. குருசில் - சீவசாமி. வில் - ஒளி. விழுத்தவம் - சிறந்ததவம், குமரர் : நந்தட்டன் முதலாயினோர்.

( 464 )

வேறு

3063 முழுதுமுந் திரிகைப் பழச் சோலைத்தே
னொழுகிநின் றசும்பும் முயர் சந்தனத்
தொழுதிக் குன்றந் துளும்பச்சென் றெய்தினான்
பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே.

   (இ - ள்.) பழுது இல் வாய் மொழிப் பண்ணவன் - குற்றம் அற்ற வாய்மொழியை உடைய சீவகசாமி; முழுதும் முந்திரிகைப் பழச்சோலை - முற்றும் முந்திரிகைப் பழச்சோலையில்; தேன் ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தனத் தொழுதிக் குன்றம் - தேன் சொரிந்து நிற்கையினாலே முற்றும் அசும்புகின்ற, உயர்ந்த சந்தனமரத் தொகுதியையுடைய குன்றிலே; துளும்பச் சென்று எய்தினான் - (ஆங்கு இருப்போர்) வருந்தச் சென்று சேர்ந்தான்.