பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1749 

அல்லிமேல் நடந்த கோவே!- தாமரை அகவிதழ்மேல் நடந்த கோவே!; அச்சத்துள் நீங்கினோம்- அச்சத்தினின்றும் நீக்கினோம்.

   (வி - ம்.) நல்வினையின் தன்மையை அவன் கூறக்கேட்ட தேவியர் இங்ஙனம் கூறினார். இச் செய்யுளிரண்டும் கொண்டு கூற்று.

( 501 )

வேறு

3100 மணியினுக் கொளியக மலர்க்கு மல்கிய
வணியமை யங்குளிர் வாச மல்லதூஉந்
திணியிமி லேற்றினுக் கொதுக்கஞ் செல்வநின்
னிணைமலர்ச் சேவடி கொடுத்த வென்பவே.

   (இ - ள்.) செல்வ! - செல்வனே!; மணியினுக்கு ஒளி - வீடுபெற்ற உயிருக்கு ஒளியையும்; அணி அமை அகமலர்க்கு மல்கிய அம் குளிர்வாசம் - அழகமைந்த எம் உள்ளத் தாமரைக்கு நிறைந்த குளிர்ந்த மணத்தையும்; அல்லதூஉம் - அதுவல்லாமலும்; திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் - திணிந்த இமிலுடைய ஏறாகிய அறத்தினுக்கு இருப்பிடத்தையும்; நின் இணைமலர்ச் சேவடி கொடுத்த - நின் இரண்டு மலரனைய சேவடிகள் கொடுத்தன; என்ப - என்று புகழா நிற்பர்.

   (வி - ம்.) மணியென்றது, மணியுயிரை; அது வீடுபெற்ற வுயிராம். அகமலர் என்றது தங்களுடைய நெஞ்சத்தாமரைகளை, இமில் என்றது அறத்தினை; அதன் வடிவம் அஃதாகலான். இதுவும் அரசியற் கூற்று.

( 502 )

(பரிநிர்வாணம்)

3101 இகலிருண் முழுமுத றுமிய வீண்டுநீர்ப்
பகல்சுமந் தெழுதரும் பருதி யன்னநின்
னிகலிரு மரைமல ரளித்த சேவடி
தொகலருங் கருவினை துணிக்கு மெஃகமே.

   (இ - ள்.) இகல் இருள் முழுமுதல் துமிய - தன்னொடு மாறுபடும் இருளாகிய பெரிய வடிவு துமியும்படி; ஈண்டு நீர்ப்பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின் - மிகுநீராகிய கடலிலே ஒளியைச் சுமந்து எழுகின்ற ஞாயிறு போன்ற நின்னுடைய; இகல் இருமரை மலர் அளித்த சேவடி - (இருவினையுடன்) மாறுபட்ட இரண்டு தாமரை மலரை அருளிய சேவடிகள்; தொகல் அருங் கருவினை துணிக்கும் எஃகம் - தொக்க அரிய தீவினையை அறுக்கும் வாள் ஆகும்.

   (வி - ம்.) இச் செய்யுளும் தேவியர் கூற்று.