பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 35 

51 கண்ணெனக் குவளையும் கட்ட லோம்பினார்
வண்ணவாண் முகமென மரையி னுட்புகார்
பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்
தண்வய லுழவர்தந் தன்மை யின்னதே.

   (இ - ள்.) வண்ண வாள்முகம் என மரையின் உள்புகார் - காதல் மகளிரின் அழகிய ஒளிமிகும் முகம் என்று நினைத்துத் தாமரையாகிய களையின் அருகு செல்லாத உழவர் ; கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார் - அவர்களுடைய கண்ணென்றே நினைத்துச் சூடுதற்குப் பறிக்குங் குவளையையும் களையாகப் பறிப்பதை நீக்கி; பண் எழுத்து இயல்படப் பரப்பியிட்டனர் - பண்ணினை எழுத்தின்வடிவு தோன்றப் பாடினர்; தண்வயல் உழவர்தம் தன்மை இன்னது - குளிர்ந்த வயலில் உழவரின் தன்மை இவ்வாறு இருந்தது.

 

   (வி - ம்.) குவளையும்: உம்மை (இழிவு) சிறப்பும்மை. ஓம்பினார் : வினையெச்சமுற்று (வினைமுற்று வினையெச்சப் பொருளில் வந்தது.) உள் புகார் : தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) தாமரையைக், 'கடவு ளொண்பூ அடைத லோம்பி' (பெரும்பாண்-290) எனக் கூறுதலானும் அவர் பறியாராயிற்று. ' மரையினுள் ' என்னும்1 உம்மையில் சொல், எஞ்சு பொருட் கிளவியான செஞ்சொல் அன்மை உணர்க ; (தொல் -இடை-36) முகமும் கண்ணும் காதன்மையைத் தோற்றுவித்தலின் அதற்கேற்கப் பாடினாரென்க.

( 22 )
52 நித்திலப் பந்துட னீன்று பாதிரி
யொத்தபூ வுடற்றிய நாவி னாகினாற்
றத்துநீர் நாரைமே லெறியத் தண்கடல்
பைத்தெழு திரையெனப் பறவை யாலுமே.

   (இ - ள்.) நித்திலப் பந்துஉடன் ஈன்று - முத்துப் பந்து போலும் முட்டையைச் சேர ஈன்று ; ஒத்த பாதிரிப்பூ உடற்றிய நாவின் நாகினால் - தன் நாவிற்கு ஒத்த பாதிரியினது பூவைக் கெடுத்த நாவினையுடைய நத்தையாலே ; நாரைமேல் தத்துநீர் எறிய - நாரையின்மேல், தத்தும் நீர் எறிய ; தண்கடல் பைத்து எழுதிரை எனப் பறவை ஆலும் - குளிர்ந்த கடலில் விரிந்தெழும் அலைபோல அந்த நாரை மெல்ல எழுந்து ஒலிக்கும்.

 

   (வி - ம்.) 'நித்திலப் பந்து' உவமத்தொகையில் வந்த ஆகுபெயர்; 'கந்தருவ வழக்கம்' (இறை-க) என்றாற்போல. 'ஈன்று (நாவினை) உடைய' என்க.

 

   இது வேண்டிய அளவிலே நீர் பாய்கின்றமை கூறிற்று.

( 23 )

1. உம்மையில்லாத சொல். 'மரை' என இருப்பின் செஞ்சொல் ஆகும். உருபும் இருப்பதாற் செஞ்சொலன்று.