பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 376 

   648 - முதல் இச் செய்யுள் முடியவுள்ள மூன்று செய்யுளுள்ளும், காந்தருவதத்தையின் கணவன் தனக்குரிய விச்சாதர வடிவத்தில் தோன்றாமல் மானிட வடிவத்தில் இம் மண்ணுலகத்தே தோன்றினானாக அவனை அறியாது இராசமாபுரத்தே நாடியபொழுது மானிட வடிவின் மறைந்த அக் காதலன் தன் மிடற்றுப் பாடலை யாழோடு பாடித் தன்னை உணர்த்தி அவளைத் தழுவினான் என்னும் ஒரு பொருள் தோன்ற அமைந்திருத்தலை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.

( 158 )

வேறு

 
651 தளையவிழ் கோதை பாடித்
  தானமர்ந் திருப்பத் தோழி
விளைமதுக் கண்ணி வீணா
  பதியெனும் பேடி வேற்க
ணிளையவள் பாட வீர
  ரெழால்வகை தொடங்க லன்றேல்
வளையவ ளெழாலின் மைந்தர்
  பாடுக வல்லை யென்றாள்.

   (இ - ள்.) தளை அவிழ் கோதை பாடி - முறுக்கலர்ந்த பூங்கோதையாள் அவை வணக்கம் பாடி; தான் அமர்ந்து இருப்ப - யாழ் வாசிக்கத் தான் அமைந்திருக்கும்போது; தோழி விளை மதுக்கண்ணி வீணாபதி எனும் பேடி - அவள் தோழியாகிய விளையுந் தேனையுடைய கண்ணியாள் வீணாபதி என்னும் பேடி; வேல்கண் இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் - வேற்கண்ணாள் தத்தை பாடும்போது, அதற்கேற்ப வீரர்கள் யாழின் கூறுபாட்டை வாசிக்கத் தொடங்குக; அன்றேல் வயைவள் எழாலின் மைந்தர் வல்லை பாடுக என்றாள் - அதுவேயன்றி, வளையணிந்த தத்தையின் யாழ் வாசினைபோல மைந்தர் விரைந்து பாடுக என்றுரைத்தாள்.

 

   (வி - ம்.) தொடங்கல் : அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள். 'இற்றெனக் கிளத்தல்' (தொல் கிளவி. 19) போல, இதற்கு விடை கூறஇயலாத வேந்தர் வீணாபதியின் தோற்றத்தைக் கண்டு அவளுடனே நகையாடுதலை அடுத்த செய்யுள் காட்டும்.

 

   கோதை : தத்தை. இளையவள் : தத்தை. வளையவள் : தத்தை. எழால் வகை - யாழின் கூறுபாடு.

 
  ”இதற்கு உத்தரங் கூறலாற்றாது அவளுடனே நகையாடுகின்றார்”  

   எனவரும் நச்சினார்க்கினியர் நுண்ணுரை இன்பம் பெரிதும் உடைத்து.

( 159 )