பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 381 

நாவாலும் பாடிற்றோ?; என்று நைந்தார் - என்று கூறி அரசர் முதலானோர் வருந்தினார்.

 

   (வி - ம்.) இது பதினொரு வகையிலும் உள்ளாளப் பாட்டுப் பாடுங்கால் இடைபிங்கலையை இயக்கம் அறுத்து, மூலாதாரம் முதல் பிரமரந்திரம் அளவும் இயக்கம் ஆக்கி, நடுவு தொழில்வரப் பாடுதல் என்றறிக;

 
  ”உள்ளாளம் விந்துவுடன் நாதம் ஒலியுருட்டுத்  
  தள்ளாத தூக்கெடுத்தல் தான்படுத்தல் - மௌ்ளக்  
  கருதி நலிதல்கம் பித்தல் குடிலம்  
  ஒருபதின் மேலென் றுரை.”  
  ”கண்ணிமையா கண்டம் துடியா கொடிறசையா  
  பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா - எண்ணிலிவை  
  கள்ளார் நறுந்தெரியற் கைதவனே? கந்தருவர்  
  உள்ளாளப் பாடல் உணர்.”  

   இசை மரபு

( 166 )

வேறு

 
659 இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார்
வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழெழீஇ
விசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலா
மசிப்பபோன் றிருவிசும் படைந்த வென்பவே.

   (இ - ள்.) இசைத் திறத்து அனங்கனே அனைய நீரினார் - இசையின் நெறியிலே காமனே யனைய தன்மையராகிய; வசைத்திறம் இலாதவர் - வசை வகையறியாதவர்; வான் பொன் யாழ் எழீஇ - உயர்ந்த பொன் யாழை வாசித்து; அவர் விசைத்துப் பாடலின் - அவரும் உச்சத்தே பாடுதலின்; புள் எலாம் வெருவி - (முன் மெய்ம்மறந்து வீழ்ந்த) பறவைகள் எல்லாம் வெருவி; அசிப்ப போன்று இருவிசும்பு அடைந்த - அவரை நகைப்பன போலப் பெரிய வானை அடைந்தன.

 

   (வி - ம்.) என்ப, ஏ : அசைகள். அசிப்ப : ஹஸிப்ப என்னும் வடசொல் திரிபு.

 

   அனங்கனேயனைய நீரினார் என்றது அரசர் மக்களை. குலமொத்தலின் அரசரை முற்கூறினார். இன்பம் கெழுமப் பாடுதலறியாது தாம் அவளை வெல்லுதற் பொருட்டு விசைத்துப் பாடினர் என அவர்தம் மாட்டாமையையும் நோக்கத்தினையும் ஒருங்கே உணர்த்துவார் விசைத்தவர் பாட என்றார். அசித்தல் - பரிகசித்தல்.

( 167 )
660 மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக்
கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்
போதரப் பாடினாள் புகுந்த போயின
தாதலர் தாரினார் தாங்கள் பாடவே.