பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 425 

   (இ - ள்.) வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை - மதுவை விரும்பிய கரிய வண்டு குதித்து மிதித்தலால் அலர்ந்த மாலையினையும்; சூழ்மணிக் கோட்டு - சூழ் மணிகள் பதித்த கோட்டினையும் உடைய; வீணை - யாழிலே; சுகிர் புரி நரம்பும் நம்பி ஊழ்மணி மிடறும் - சீவி முறுக்கின நரம்பும் நம்பியின் ஒழுங்காகிய அழகிய மிடறும்; ஒன்றாய்ப் பணிசெய்த ஆறு நோக்கி - ஒன்றாக ஏவல் புரிந்த வகையினைப் பார்த்து; தாழ் மணித்தாமம் மார்பின் கின்னரர் சாம்பினார் - நீண்ட மாணிக்க மாலையணிந்த மார்பினையுடைய கின்னரர் மெய்சோர்ந்தனர்.

 

   (வி - ம்.) இச் செய்யுளால் யாழும் மிடறும் ஒன்றாய் இசைத்தமை கூறப்பட்டது.

( 236 )
729 விண்ணவர் வியப்ப விஞ்சை
  வீரர்கள் விரும்பி யேத்த
மண்ணவர் மகிழ வான்கட்
  பறவைமெய்ம் மறந்து சோர
வண்ணறா னனங்க னாணப்
  பாடினா னரச ரெல்லாம்
பண்ணமைத் தெழுதப் பட்ட
  பாவைபோ லாயி னாரே.

   (இ - ள்.) விண்ணவர் வியப்ப - வானவர் வியப்புற; விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த - வித்தியாதர வீரர் விருப்பத்துடன் வாழ்த்த; மண்ணவர் மகிழ - மக்கள் களிக்க; வான்கண் பறவை மெய்ம்மறந்து சோர - வானிலியங்கும் பறவைகள் தம்மை மறந்து சோர; அனங்கன் நாண - காமன் வெள்க; அண்ணல்தான் பாடினான் - சீவகன் பாடினான்; அரசர் எல்லாம் - வேந்தர்கள் யாவரும்; பண் அமைத்து எழுதப்பட்ட பாவைபோல் ஆயினார் - பண்ணுதற்கு அமைத்து எழுதப்பெற்ற பாவைபோல் ஆனார்கள்.

 

   (வி - ம்.) இச் செய்யுளால் மிடற்றுப் பாடலின் சிறப்புத் தெரிவிக்கப்பட்டது.

( 237 )

வேறு

 
730 பருந்து நிழலும்போற் பாட்டு மெழாலுந்
திருந்துதார்ச் சீவகற்கே சோ்ந்தனவென் றெண்ணி
விருந்தாக யாழ்பண்ணி வீணைதான் தோற்பா
னிருந்தா ளிளமயில்போ லேந்திலைவேற் கண்ணாள்.