பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 445 

காண்டும் என்று - சிறப்புடையது அறிவோம் என்று; இங்கு வார் முரலும் கலை - இவ்விடத்தில், நீண்ட, ஒலிக்கும் மேகலையை; ஏந்து அல்குல் - ஏந்திய அல்குலையுடைய; நங்கை வாள்படை - தத்தையின் வாளேந்திய பெண்படை; நங்கையைச் சூழ்ந்தது - தத்தையைச் சூழ்ந்து நின்றது.

 

   (வி - ம்.) இங்கு என்பது தத்தை யிருக்கும் இடம்.

( 271 )

வேறு

 
764 கூன்களுங் குறளு மஞ்சிக்
  குடர்வெந்து கொழும்பொற் பேழை
தான்கொளப் பாய வோடிச்
  சாந்துக்கோய் புகிய செல்வ
தேன்கொள்பூ மாலை சூடித்
  தாமமாய்த் திரண்டு நிற்ப
வான்பளிங் குருவத் தூணே
  மறைபவு மாய வன்றே.

   (இ - ள்.) கூன்களும் குறளும் அஞ்சிக் குடர் வெந்து - (படையெழுச்சி கண்ட) கூனும் குறளும் நடுங்கிக் குடல் தீய்ந்து; கொழும் பொன் பேழை தான் கொளப் பாய ஓடி - வளமிகும் பொன் பெட்டி தங்களை உள்ளடக்கிக் கொள்ளுமென்று கருதி அதனுள்ளே பாய்கைக்கு ஓடியும்; சாந்துக் கோய் புகிய செல்வ - சாந்திருந்த பரண்களிலே புகுதற்குச் செல்வனவும்; தேன் கொள் பூமாலை சூடித் தாமமாய்த் திரண்டு நிற்ப - தேனுற்ற மலர் மாலைகளை அணிந்து மாலை வடிவமாகத் திரண்டு நிற்பனவும்; வான்பளிங்கு உருவத்தூணே மறைபவும் ஆய - சிறந்த பளிங்கினாலாகிய அழகிய தூணிலே மறைவனவும் ஆயின.

 

   (வி - ம்.) இச்செய்யுள் இனிய நகைச்சுவைக்கு இடனாதலுணர்க. இந்நிகழ்ச்சியைக் கண்ட சீவகன் முறுவலித்தலை அடுத்த செய்யுளிற் காண்க.

( 272 )
765 இங்கித நிலைமை நோக்கி
  முறுவலித் தெரிபொன் மார்ப
னங்கையைக் காக்கும் வண்ண
  நகாநின்று மொழிந்து பேழ்வாய்ச்
சிங்கந்தான் கடிய தாங்கோர்
  செழுஞ்சிங்க முழுக்கிற் சீறிப்
பொங்கிமேற் செல்வ தேபோற்
  பொலங்கழ னரலச் சென்றான்.