பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 446 

   (இ - ள்.) எரி பொன் மார்பன் - விளங்கும் பொன் மார்பன்; இங்கித நிலைமை நோக்கி - (படையெழுச்சியும் கூனுங் குறளும் அஞ்சியதும்) ஆகிய குறிப்பின் தன்மையைக் கண்டு; முறுவலித்து - நகைத்து; நங்கையைக் காக்கும் வண்ணம் நகாநின்று மொழிந்து - தத்தையைக் காக்கும் இயல்பை நகைமுகத்துடன் அவளுக்குக் கூறி; கடியது பேழ்வாய்ச் சிங்கந் தான் - கடிய தாகிய, பெருவாய்ச் சிங்கம் ஒன்று; ஆங்கு ஓர் செழுஞ் சிங்க முழக்கின் சீறி - ஆங்குத் தன்னால் அறியப்பட்ட கொழுத்த சிங்கங்களின் முழக்கைக் கேட்டு முழங்கி; பொங்கி மேல் செல்வதே போல் - கிளர்ந்து அவற்றின்மேற் போவது போல; பொலங் கழல் நரலச் சென்றான் - பொற்கழல் ஒலிக்கப் போனான்.

 

   (வி - ம்.) இங்கிதம் - குறிப்பு. கடியது ஆங்கோர் சிங்கந்தான் என மாறுக. இனி ஓர் - அசைச்சொல் எனினுமாம். நரல- ஒலிப்ப.

( 273 )
766 பதுமுக குமரன் மற்றிப் பாவையைக் காவ லோம்பி
மதுமுக மாலை நெற்றி மதகளி றுந்தி நிற்ப
நுதிமுக வாளும் வில்லு நுண்ணிலை வேலு மேந்திச்
சதுமுக மாகச் சேனை நமர்தலைப் பெய்க வென்றான்.

   (இ - ள்.) பதுமுக குமரன் மற்றுஇப் பாவையைக் காவல் ஓம்பி - பதுமுகன் வேறேயிருந்து இந் நங்கையைக் காத்தலைப் பேணி; மதுமுகம் மாலை நெற்றி மதகளிறு உந்தி நிற்ப - தேன் பொருந்திய மாலை அணிந்த நெற்றியை யுடைய மதயானையை (மண்டபத்தின் வாயில்வரை) செலுத்தி அதிலே நிற்க; நமர் நுதிமுக வாளும் வல்லும் நுண் இலை வேலும் ஏந்தி - நம்முடைய சுற்றத்தார், கூரிய வாளையும் வில்லையும் நுண்ணிய இலைமுக வேலையும் கைக்கொண்டு; சேனை சதுமுக மாகத் தலைப்பெய்க என்றான் - நம் சேனையை நான்கு வகையாக அவர் வகுத்த இடத்தே நிறுத்துக என்றான்

 

   (வி - ம்.) பதுமுனை ஒழிந்த தோழர் மூவர் மூன்று கை நபுல விபுலர் ஒருகை நான்கு (சீவக. 746. 'ஐந்தலை அரவு' நோக்குக.)

( 274 )
767 வட்டுடை மருங்குல் சோ்த்தி
  வாளிரு புடையும் வீக்கித்
தட்டுடைப் பொலிந்த திண்டோ்த்
  தனஞ்செயன் போல வேறிக்
கட்டளைப் புரவி சூழ்ந்து
  கால்புடை காப்ப வேவி
யட்டுயிர் பருகுங் கூற்றங்
  கோளெழுந் தனைய தொத்தான்.