பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 449 

என்றார் - உன் உடம்பாகிய முதலைக் கொண்டு பிழைக்கப் போ என்றனர்.

 

   (வி - ம்.) தேற்றாய் : எதிர்மறை; 'தேற்றாய் பெரும! பொய்யே' (புறநா - 59) என்றதுபோல் நின்றது. இலேசு : சிறுமையாகிய ஊதியம்.

 

   இது, சீவகனை வணிகன் என்று கருதிய அரசர் அவனை அசதியாடியது. பொதுவாகப் பொருளீட்டுவாரியல்பினை வாணிகர்க் கேற்றி ஊணிகந்து ஈட்டப்பட்ட ஊதியம், என்றார் ”உடா அதும் உண்ணாதும் தம்முடம்பு செற்றும்........ஈட்டினார்” (நாலடி. 10) என்றார் பிறரும்.

( 278 )
771 தம்முடைப் பண்டந் தன்னைக்
  கொடுத்தவ ருடைமை கோட
லெம்முடை யவர்கள் வாழ்க்கை
  யெமக்குமஃ தொக்கு மன்றே
யம்முடி யரசிர்க் கெல்லா
  மென்கையி லம்பு தந்து
நும்முடைத் திருவுந் தேசு
  நோக்குமுன் கொள்வ லென்றான்.

   (இ - ள்.) தம்முடைப் பண்டந் தன்னைக் கொடுத்து அவர் உடைமை கோடல் - தம்முடைய பொருளைப் பிறர்க்குக் கொடுத்து, அவர்களின் செல்வத்தை வாங்கிக்கொள்ளுதல்; எம்முடையவர்கள் வாழ்க்கை - எம் குலத்தவரின் வாழ்க்கை; எமக்கும் அஃது ஒக்கும் அன்றே? - எமக்கும் அவ்வணிகம் பொருந்தும் அல்லவோ?; அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து - (இனி) யான் அழகிய முடியுடைய அரசர்களாகிய நுங்களுக்கெல்லாம் என் கையில் உள்ள அம்பைக் கொடுத்து; நும்முடையத் திருவும் தேசும் கொள்வல் - உங்களுடைய வெற்றித் திருவையும் புகழையும் கொள்வேன்; நோக்குமின் என்றான் - வல்லராயின் அவற்றைக் காக்கப் பாருங்கள் என்று சீவகன் செப்பினான்.

 

   (வி - ம்.) எம்முடையவர்கள் என்றது வணிகரை. கொடுத்து வாங்குதல் எங்குலத் தொழில், அங்ஙனமே யானும் அம்பு முதலியவற்றைக் கொடுத்துத் திரு முதலியவற்றை வாங்குவல் என்றான்.

( 279 )
772 மட்டுலாந் தாரி னாய்நின்
  வனப்பினோ டிளமை கல்வி
கெட்டுலாய்ச் சிலம்பு செம்பொற்
  கிண்கிணி மகளிர் கோங்க